நேபாளத்தில் பெருவெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் நேற்று 10-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கொத்து கொத்தாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதுவரை 1,280 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 1,282 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், பல்வேறு பகுதிகளிலும் வெளிநாட்டினர் உள்பட 4,798 பேர் மாயமாகி உள்ளனர். இந்நிலையில், பெருவெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்ளூர் கல்வி மேம்பாட்டு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொகுத்த தகவல்களை மேற்கோள் காட்டி காத்மாண்டு போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நுவாகோட் மாவட்டத்தில் 300 முதல் 350 சிறுவர்களும் ரசுவா மாவட்டத்தில் சுமார் 280 சிறுவர்களும் மாயமாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரிடர் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இரு மாவட்டங்களிலும் சேர்த்து 22 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் காணாமல் போயுள்ளதாக கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ரசுவா மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 15 பேர், தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒருவர் என 16 ஆசிரியர்களும், நுவாகோட்டில் 6 ஆசிரியர்களும் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு அறிவித்த முதற்கட்ட நிவாரண திட்டங்கள்
நேபாள பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு நேபாள அரசு ஒரு நிவாரணத் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சலுகைகள், கடன் மறுசீரமைப்பு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பேரழிவால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு மாற்று இடம் வழங்கும் பணிகளையும் அரசு தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளத்தில் சிக்கி 1,250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.
இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் சொத்துகளுக்கான முதற்கட்ட நிவாரண திட்டத்தை நேபாள அமைச்சரவை அறிவித்துள்ளது.
அதன்படி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்த வணிக வாகனங்கள், போக்குவரத்து உபகரணங்கள், இயந்திரங்கள், கருவிகள் மற்றும் பிற உபகரணங்களை சுங்க வரிகள் செலுத்தாமல் மாற்றுப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றுப் பொருட்களை ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு சுங்க அலுவலகம் மூலம் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் சொத்துகளுக்கு, சொத்து மற்றும் வணிக வரிகள், கட்டிட அனுமதி கட்டணங்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குமாறு மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடனாளிகள் கடன்களை மறுசீரமைக்கவும், மறு அட்டவணைப்படுத்தவும் வசதி செய்து தருமாறு நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஷ்டிர வங்கிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
வெள்ளத்தில் வீடுகளையும் குடியிருப்புகளையும் இழந்தவர்களுக்கான நீண்டகாலத் திட்டத்தை அரசு தயாரித்து வரும் நிலையில், இந்த இடைக்கால நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) மேற்கொண்ட முதற்கட்ட மதிப்பீட்டின்படி, 15 உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 16 லட்சம் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளத்தில் 8,317 வீடுகள் அழிந்துள்ளன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அரசால் மீட்கப்பட்ட சுமார் 3,948 பேர் நுவாகோட், ரசுவா, தாடிங் மற்றும் காத்மாண்டு ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது.



