நிதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்கும் 22ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடமிருந்து நேர்மறையான பதில்கள் எவையும் கிடைக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க வீரகேசரிக்கு தெரிவித்தார்.
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பின்போது, சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் பிரசன்னமான சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவில் பங்கேற்றிருந்த லால்விஜேநாயக்க சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயர்நீதிமன்ற, மேல் நீதிமன்ற நீதிபதிகளை இலக்கு வைத்து ஒட்டுமொத்த நீதிபதிகளின் வயதெல்லையை இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்காக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள 22 ஆவது திருத்தச்சட்டத்தினை தற்போதைக்கு இடைநிறுத்துமாறு நாம் ஜனாதிபதி அநுரகுமாரவிடத்தில் கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொண்டதாக இல்லை. அவரைப்பொறுத்தவரையில் நீதித்துறையில் மறுசீரமைப்பை நோக்கக் கொண்டு அந்தச் செயற்பாடு மேற்கொள்வதாகவே கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
அதனையடுத்து நாம் நெகிழ்வுத்தன்மையுடன், வர்த்தமானியை மீளப்பெற்று குறித்த செயற்பாட்டை இடைநிறுத்த முடியாது விட்டால் தற்காலிகமாக காலம் தாழ்த்தி குறித்த அரசியலமைப்பு திருத்தம் சம்பந்தமான பரந்து பட்ட கலந்துரையாடலுக்கான சகல பங்காளர்களையும் உள்ளடக்கியதான குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
எனினும், அவர் அந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை.
அந்த வகையில், ஜனாதிபதி அநுரகுமாரவைப் பொறுத்தவரையில் நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பைச் செய்வதற்காக உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் உள்ள விடயங்களை காரணமாக காண்பிக்கின்றார். அவை ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவை அல்ல.
அவர் 22ஆவது திருத்தச்சட்ட மூலம் சம்பந்தமாக எமது நிலைப்பாடுகள் மற்றும் கரிசைகளை பொருட்டாக கொண்டு நேர்மறையான பதிலளிப்புக்கள் எவற்றையும் செய்யவில்லை என்றார்.



