வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருப்பதுடன், அன்றைய தினம் காலை கிளிநொச்சியில் கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் அத்தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்படும்.
அதன் நீட்சியாக இவ்வருடமும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மையைக் கண்டறிவதுடன், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்படும். அதுமாத்திரமன்றி உள்ளகப்பொறிமுறைகளின் தோல்வியின் விளைவாக சர்வதேச பொறிமுறையொன்றை இம்மாநாட்டின் ஊடாக வலியுறுத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மேற்படி சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும், தெற்கில் மாத்தறையிலும் நினைவுகூரல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருப்பதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க அன்றைய தினம் (25) தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மாத்தறையில் கவனயீர்ப்புப்போராட்டமொன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அறியமுடிகின்றது.



