ஏன் நுரையீரல் புற்றுநோய் வருகிறது? மருத்துவர் விளக்கம்

 

புகைபிடிக்காத பெண்கள் மற்றும் இளம் வயதினரை அதிகம் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்! இதற்கான காரணங்கள், ஆரம்ப அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளை மருத்துவர் விளக்குகிறார்.
பொதுவாக நுரையீரல் புற்றுநோய் என்றாலே புகைபிடிப்பவர்களுக்கே வரும் நோய் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால், தற்போதைய மருத்துவ உலகத்தில் புகைபிடிக்கும் பழக்கமே இல்லாத பலருக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்படுவது அதிகரித்து வருகிறது.

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் கொண்டாடப்படும் நிலையில், புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பதற்கு சுற்றுச்சூழல் மாசுபாடு, மரபணு காரணங்கள் மற்றும் நச்சு வாயுக்களின் தாக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் வயதினரிடம் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக

நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணங்கள்

மருத்துவர் ஸ்ரீவத்சா லோகேஸ்வரன் கூற்றுப்படி, “நீண்டகால காற்று மாசுபாடு, புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருப்பது, வீட்டுக்குள்ளேயே விறகு எரித்தல், ரேடான் வாயு, பணியிடங்களில் அஸ்பெஸ்டாஸ் மற்றும் டீசல் புகை போன்ற ரசாயனங்களுக்கு தொடர்ந்து ஆளாகுதல், மரபணு காரணிகள் மற்றும் ஏற்கனவே இருந்த நுரையீரல் நோய்கள் ஆகியவை புகைபிடிக்காதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன” என்கிறார்.

கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்

புகைபிடிக்கும் பழக்கம் இல்லாததால், நோயாளிகளும் மருத்துவர்களும் ஆரம்பத்திலேயே புற்றுநோய் என்று சந்தேகிக்க மாட்டார்கள். இதனால் நோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது.

​3 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல்​
காரணமின்றி மூச்சுத்திணறல் ஏற்படுதல்
தொடர்ந்து நெஞ்சு வலி இருப்பது
சளியுடன் ரத்தம் வருவது
அடிக்கடி ஏற்படும் மார்பக தொற்றுகள்
காரணமின்றி உடல் எடை குறைவது
சோர்வு மற்றும் பலவீனம்
குறிப்பு: நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துகொள்ளக்கூடாது

அனைத்து நோய்களையும் முழுமையாக தடுக்க முடியாது என்றாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றுவது மூலம் அதன் அபாயத்தை குறைக்க முடியும்.

வீட்டிற்குள்ளும் வெளியேயும் காற்று மாசுபாட்டின் அளவை குறைக்க வேண்டும்
வீட்டிற்குள் காற்றோட்டம் நன்றாக இருப்பதை உறுதி செய்யவும்
​மற்றவர்கள் புகைபிடிக்கும் போது அங்கிருந்து விலகி இருங்கள்
பணியிடங்களில் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்றுங்கள்.
நாள்பட்ட இருமல் அல்லது சுவாச பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

மேம்பட்ட CT ஸ்கேன் மற்றும் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப பரிசோதனைகள் மூலம், மிகச் சிறிய நுரையீரல் கட்டிகளையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடிகிறது. ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்து, துல்லியமான பரிசோதனைகள் மூலம் உடனடியாக சிகிச்சையை தொடங்கினால், குணமடைவதற்கான வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது என்கிறார் மருத்துவர்.

எனவே, நுரையீரல் புற்றுநோய் புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமே வரும் நினைத்து கொண்டிருக்காமல், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஆரம்பகால கண்டறிதல் மட்டுமே உயிரை காக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்