நாட்பட்ட மன சிதைவு பாதிப்பிற்குரிய சிகிச்சை

 

எம்மில் சிலர் திடீரென்று நண்பர்கள் வேண்டாம்… நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வேண்டாம்… என்று அவர்களை துண்டித்து விட்டு, தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.

வேறு சிலர் சமூக வலைதள பக்கங்களில் இருந்து விலகி, புதிய நண்பர்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இவை வளர் இளம் பருவத்தில் இயல்பானதாக இருந்தாலும்… இவை அனைத்தும் மன சிதைவு நோய் பாதிப்பிற்கான ஆரம்ப அறிகுறிகள் என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இவர்களை தொடர்ந்து அவதானித்து அவர்களுக்கு தேவையான உளவியல் நல சிகிச்சையை வழங்கி இயல்பானவர்களாக மாற்றிட வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஒரு விடயத்தை கவனிப்பதில் தடுமாற்றம்- உறக்கம் சார்ந்த குறைபாடுகள்- அமைதியின்மை – நாளாந்த கடமைகளையும், பணிகளையும், விரைவாகவும், நிறைவாகவும் சாத்தியப்படுத்துவதில் சிக்கல் – கவலையுடன் இருப்பது – அவநம்பிக்கையுடன் பேசுவது- இயல்புக்கு பொருந்தாத கருத்துகளை தொடர்ந்து வெளியிடுவது- இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், இவர்கள் உளவியல் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதன் அறிகுறிகளாக இருக்கக்கூடும்.

வேறு சிலர் இந்த அறிகுறிகளில் உச்சமாக மாயத் தோற்றம் இருக்கிறது என்றும்… உண்மைகளுக்கு மாறான விடயங்களின் மீது அதீத நம்பிக்கை கொண்டவராகவும் நடந்து கொண்டால்… இவை நாட்பட்ட உளவியல் பாதிப்பின் அதீத அறிகுறியாக உணர்ந்து, அவர்களுக்கு உடனடியாக உளவியல் மேம்பாட்டு சிகிச்சையை வழங்கிட வேண்டும்.

இவர்களுக்கு எது மன மகிழ்ச்சியை அளிக்கிறது? என்பதனை துல்லியமாக அவதானிப்பதில்… கடும் சிரமம் ஏற்படும். பெரும்பாலானவர்களுக்கு எம்முடைய மூளை பகுதியில் ஏற்படும் அசாதாரணமான வேதியல் மாற்றங்கள்- பாரம்பரிய மரபணு குறைபாடு – சுற்றுச்சூழல்- ஆகியவற்றின் காரணமாக இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இவர்களை தொடர்ந்து அவதானித்து அதற்குரிய வழிகாட்டலை அன்புடன் அரவணைத்து வழங்கவில்லை என்றால் தற்கொலை முயற்சி அல்லது அது தொடர்பான எண்ணங்களுக்கு ஆட்படுவர்.

எந்த ஒரு சிறிய விடயங்களுக்கும் பதட்டப்படும் கோளாறு அதிகமாகிவிடும். குறிப்பாக மன அழுத்த பிரச்சனையை தொடர்ந்து சிக்கலாக்கிக் கொள்வார்கள்.

இவர்களுக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் அல்லது சிடி ஸ்கேன் பரிசோதனை, போதை பொருள் பாவனை குறித்த பரிசோதனை, சமூக தொடர்பு குறித்த பரிசோதனை… ஆகியவற்றை மேற்கொண்டு சிகிச்சையை வடிவமைப்பர்.

இவர்களுக்கு நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலமாகவும், உளவியல் மேம்பாட்டிற்கான கலந்தாலோசனை சிகிச்சை -எலெக்ட்ரோ கான்வல்சிவ் தெரபி – என நவீன சிகிச்சைகளை ஒருங்கிணைந்து வணங்கி முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.