யாழில் தமக்கு தாமே தீ மூட்டிய இரட்டை சகோதரிகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

 

யாழில் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டி, தீ காயங்களுக்கு உள்ளாகிய இரட்டைச் சகோதரிகள் இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இரட்டையர்களே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளனர்.

ஒரே குடும்பத்தின் இரு மலர்கள்ஸ ஒரே நேரத்தில் வாடிய சோகம்!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு, குப்பிளான் பகுதியில் அபர்ணா, அபிநயா எனும் இரட்டைச் சகோதரிகள் அகால மரணமடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அன்பும் பாசமும் நிறைந்த குடும்பத்தில் ஒன்றாக வளர்ந்து, கல்விப் பயணத்திலும் ஒன்றாக பயணித்த இருவரும் இன்று எம்மை விட்டு பிரிந்திருப்பது ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

 

 

இவர்கள் தமது ஆரம்பக் கல்வியை குப்பிளான் விக்கினேஸ்வரா வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியை வயாவிளான் மத்திய கல்லூரியிலும் கற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு சகோதரிகளின் அகாலப் பிரிவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கல்விச் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அபர்ணா – அபிநயா ஆகிய இரு சகோதரிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று (01) சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதவேளை தமக்கு தாமே தீ மூட்டியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர்.

இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவர்கள் இருவரும் இன்று (02) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.

வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் உயிரிழப்பதற்கு முன்னம் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து விசாரணைகளில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.