அமெரிக்கா ஈரானின் அணுசக்தி ரகசிய பிக்ஏக்ஸ் மலை மையத்தை தாக்குதல் நடத்தும்!

 

ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்திற்கு மிக அருகில், கடினமான கிரானைட் பாறைகளுக்கு அடியில் மிக ஆழமாகக் கட்டப்பட்டு வரும் ‘பிக்ஏக்ஸ் மலை’ ரகசிய மையத்தின் மீது மிக விரைவில் அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை .

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஈரானால் வெட்டி எடுக்கப்பட்டு வரும் இந்தப் ‘பிக்ஏக்ஸ்’ மலைப் பிராந்தியம், சுமார் 100 மீட்டர் (300 அடிக்கும் மேல்) ஆழத்தில் அதிநவீனப் சுரங்கப் பாதைகளைக் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. ஈரானின் பிற அணுசக்தி மையங்கள் வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த நிலையில், சர்வதேச அணுசக்தி முகமையின் கண்களில் படாமல் ஆயிரக்கணக்கான அதிநவீன சென்ட்ரிஃபியூஜ்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்புகளைப் பாதுகாப்பாக வைக்க ஈரான் இந்த மையத்தைப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் கருதுகின்றன.

டாலஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், “பிக்ஏக்ஸ் மலையில் நடைபெறும் ஒவ்வொரு அசைவுகளையும் அமெரிக்க விண்வெளிப் படை மற்றும் செயற்கைக்கோள்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன; அங்குச் சந்தேகத்திற்குரிய எந்தவொரு நடவடிக்கையும் தீவிரமடைந்தால், அமெரிக்க ராணுவம் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுக்கும்” என பகிரங்கமாக எச்சரித்தார். நிலத்தடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த மையத்தைத் தகர்ப்பது கடினம் எனக் கருதப்பட்டாலும், அமெரிக்க ராணுவத்தின் ‘பங்கர் பஸ்டர்’ ஏவுகணைகள் மற்றும் உள்கட்டமைப்பு மீட்புத் தாக்குதல்கள் மூலம் இந்த மையத்தை முடக்குவது சாத்தியமே என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, பிக்ஏக்ஸ் மலையைச் சுற்றிப் புதிய கட்டுமானப் பணிகளும் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமைத் தலைவர் ரஃபேல் குரோசியும் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானின் அணுஆயுதக் கனவை முற்றிலுமாகத் தகர்க்கவும், அந்நாட்டு ஆட்சியைப் பலவீனப்படுத்தவும் டிரம்ப் கையில் எடுத்துள்ள இந்த ‘பிக்ஏக்ஸ்’ தாக்குதல் திட்டம், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.