லாரக் தீவில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் மீண்டும் மோதல்;

 

ஒரு மாத அமைதிக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லாரக் தீவில் ஈரானின் ராக்கெட் லாஞ்சர்களை குறிவைத்து அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் 6 மாதமாக நீடிக்கும் நிலையில் கடைசியாக கடந்த ஜூலை 29ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு பொருளாதார போர் தொடுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக இருதரப்பிலும் சண்டையின்றி மேற்கு ஆசியாவில் அமைதி நிலவியது. அதே சமயம், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தனது பிடியை இறுக்கியதால், எண்ணெய் கப்பல் போக்குவரத்து வெகுவாக பாதித்தது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா பலமுறை மிரட்டியும் ஈரான் பணியவில்லை. இந்நிலையில், ஒரு மாத அமைதிக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு திடீரென அமெரிக்க படைகள் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லாரக் தீவில் தாக்குதல் நடத்தின. ஈரானின் ராக்கெட் லாஞ்சர் தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 2 வீரர்கள் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மீண்டும் கடல் கண்ணிவெடிகள் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகளை ஏவ தயாராகி வருவதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு செய்தித் தொடர்பாளர் டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 8 ஏவுகணைகளை இடைமறித்தாக ஜோர்டானும், 3 டிரோன்களை இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகமும் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் திடீர் தாக்குதலால் மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. ஜோர்டான் உள்ளிட்ட தங்களின் ராணுவ தளங்களில் ஈரான் தாக்குதல் நடத்தினால் அதற்கான பதிலடி கடுமையாக இருக்கும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் முக்கிய எண்ணெய் சேமிப்பகங்கள் இடம் பெற்றுள்ள கார்க் தீவை அமெரிக்கா வெகுவாக குறிவைத்து வருகிறது. இந்நிலையில், லாரக் தீவில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கார்க் தீவு பற்றி எரிவது போன்ற ஏஐ வீடியோவை அதிபர் டிரம்ப் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டார். அதில், கார்க் தீவு சின்னபின்னமாக சிதறடிக்கப்பட்டுள்ளது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். இதனை ஈரான் மறுத்துள்ளது. டிரம்ப் சும்மா காமெடி பண்றார் என்றும் கார்க் தீவில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.