கிர்கிஸ்தானில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் நேற்று நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்கா, ஈரான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது. ஈரானின் நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக விளங்கும் இந்தியா போரை நிறுத்தவும், அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவும் இருதரப்பையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேநேரத்தில் இந்தியா ஈரானுடன் வர்த்தகம் செய்வதை கடுமையாக எதிர்த்து வரும் அமெரிக்கா இது தொடர்பாக இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.
இந்த சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் நேற்று நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது. பிப்ரவரியில் ஈரான்-அமெரிக்கா போர் தொடங்கிய பிறகு இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்தது இதுவே முதல்முறையாகும்.
இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளின் சமீபத்திய நிலை குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்ததோடு, ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். முன்னதாக ஜூன் மாதம், பிரதமர் மோடியும் பெசெஷ்கியானும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது மோதலை முடிவுக்குக் கொண்டுவர எட்டப்பட்ட புரிந்துணர்வுகளை வரவேற்ற பிரதமர் மோடி, நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தொடர்ச்சியான முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் இடையே ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியனையும் பிரதமர் மோடி சந்தித்தார். பாதுகாப்பு, பொருளாதாரம், மருந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மேற்கு ஆசியாவின் நிலைமை உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் ஆர்மேனியாவுடன் நெருக்கமாக பணியாற்ற இந்தியா விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடங்கியது ஷாங்காய் மாநாடு-மோடி, புதின், ஜி ஜின்பிங் பங்கேற்பு
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், கிர்கிஸ்தான் அதிபர் சாதிர் ஜபரோவ், அர்மீனியா பிரதமர் நிகோல் பாஷின்யான் ஆகியோரைப் பிரதமர் மோடி நேற்று தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
மோடி – புதின் சந்திப்பு: இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்றிரவு அவர் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு தனித்துவமானது, சிறப்புமிக்கது. இரு நாடுகளின் நட்புறவு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
ரஷ்யாவும் உக்ரைனும் அமைதிக்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும். மனித குலத்துக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். முடிவில்லாத போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது. இந்த விவகாரத்தில் உதவ இந்தியா தயாராக உள்ளது.
செப்டம்பர் 12, 13-ம் தேதிகளில் இந்திய தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதினுக்குச் சிறப்பு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், ‘‘ரஷ்யா – இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவரை மனதாரப் பாராட்டுகிறேன்’’ என்றார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் 6-வது உலக நாடோடிகள் விளையாட்டுப் போட்டி தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் மோடியும் அதிபர் புதினும் ஒரே காரில் சென்றனர். தொடக்க விழா மேடைக்கு இருவரும் ஒன்றாக நடந்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எஸ்சிஓ மாநாட்டில் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார்.



