ஜனவரி 22ம் தேதி, ராமர் அவதரித்த தலமான அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா நடைபெற உள்ளது. இக்கோவில் திறப்பு விழாவை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இக்கோவில் அமைந்துள்ள உத்திரபிரதேச மாநிலம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஸ்ரீராமர் பற்றி பல விஷயங்களும் பகிரப்பட்டு வருகின்றன.
1. கோவிலில் அமைப்பு :
அயோத்தி ராமர் கோவில் நாகர் பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ளது. இது கிழக்கு மேற்காக 380 அடி நீளமும், 250 அடி அகலும் கொண்டதாகும். இதன் உயரம் 161 அடியாகும். கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டதாகும். மொத்தம் 3 தளங்களைக் கொண்ட இக்கோவிலில் 392 தூண்கள், 44 கதவுகள் உள்ளன. 32 படிகள் ஏறிச் சென்று, கிழக்கு திசை வழியாக தான் கோவிலுக்குள் நுழைய முடியும்.
2. ராமர் சிலை :
கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலை, குழந்தை பருவத்தில் இருக்கும் ராமரை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் தான் ராம தர்பார் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்கள், சுவர்கள் அனைத்திலும் பல்வேறு சுவாமி சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
3. 5 மண்டபங்கள் :
இக்கோவிலில் மொத்தம் 5 மண்டபங்கள் உள்ளன. நிருத்திய மண்டபம், ராக மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம், கீர்த்தனை மண்டபம் ஆகிய ஐந்து மண்டபங்கள் உள்ளன.
4. செவ்வக வடிவ சுவர்கள் :
இந்த கோவிலை சுற்றி உள்ள சுவர்கள் செவ்வக வடிவத்தால் ஆனவை. இது 732 மீட்டர் நீளமும், 14 அடி அகலமும் கொண்டவையாகும்.
5. நான்கு மூலையில் நான்கு சன்னதிகள் :
கோவிலின் நான்கு மூலையிலும் நான்கு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சூரிய பகவான், தேவி பகவதி, விநாயகர், சிவ பெருமான் ஆகியோரின் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் வடக்கு புறம் அன்னபூரணி தேவி சன்னதியும், தெற்கு புறம் அனுமன் சன்னதியும் உள்ளன.
6. சீதை குளம் :
கோவிலுக்கு அருகில் வரலாற்று சிறப்பு மிக்க மிக பழமையான சீதை குளம் ஒன்று உள்ளது. இது ராமாயண காலத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது.
7. மற்ற சன்னதிகள் :
ஸ்ரீராம் ஜென்மபூமி வளாகத்தில் ராமர் கோவில் தவிர மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரர், மகரிஷி அகத்தியர், சபரி அன்னை, நிஷாத் மன்னர், அகலிகை ஆகியோருக்கும் கோவில்கள் உள்ளன.
8. புதுப்பிக்கப்பட்ட சிவன் கோவில் :
ராம் ஜென்மபூமியின் தென்மேற்கு பகுதியில் குபேர திலாவில் பழமையான சிவன் உள்ளது. இந்த கோவில் இங்குள்ள ஜடாயு சிலையுடன் சேர்த்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.
9. இரும்புளே கிடையாது :
ராமர் கோவிலில் எந்த பகுதியை கட்டுவதற்கும் இரும்பு என்பதே பயன்படுத்தவே இல்லை. இக்கோவிலின் அஸ்திவாரம் 14 மீட்டர் தடிமன் அடுக்கு கொண்ட கான்கிரீட்டால் செல்லப்பட்ட உருளைகளை (RCC-roller compacted concrete) பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது செயற்கை பாறைகளை கொண்டு கட்டப்பட்ட தோற்றத்தை கொடுக்கக் கூடியது. பூமியின் ஈரப்பதத்தால் கட்டிடம் சேதமடையாமல் இருப்பதற்காக 21 அடி உயர பீடத்தின் மீது கிரானைட் கற்களை பயன்படுத்தி இந்த கோவிலை கட்டி உள்ளனர்.
:
10. பக்தர்களுக்கான வசதி :
கிட்டதட்ட 25,000 பக்தர்கள் தங்கும் வசதியுடன் பக்தர்கள் தங்குவதற்கான இடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மருத்துவ வசதி, லாக்கர் வசதி உள்ளிட்ட அனைத்தும் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ளது.
11. இயற்கை பாதுகாப்பு :
ராமர் கோவில் முழுக்க முழுக்க இந்திய பாரம்பரிய முறைப்படி, உள்நாட்டு தொழில்நுட்பங்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இயற்கை மற்றும் தண்ணீரை பாதுகாக்கும் வகையில் மொத்தமுள்ள இடத்தில் 70 சதவீதம் மட்டுமே கோடில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 ஏக்கர் நிலம் பசுமையாக விடப்பட்டுள்ளது.
12. தனித்தனி இடங்கள் :
ராமர் கோவில் வளாகத்தில் குளியலறை, கழிப்பறை, கை கழுவும் இடம் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, கட்டப்பட்டுள்ளது.
13. கட்டுமான அமைப்பு :
ராமர் கோவில் வளாகத்தில் கழிவுநீர், குடிநீர், தீயணைப்பிற்கான தண்ணீர் விநியோகம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு என்று தனியாக மின்நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.



