14 பச்சிளம் குழந்தைகள் பலி பாக் மருத்துவமனையில் தீ 14 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலி

 

பாகிஸ்தானில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனையில் நேற்று காலை 7 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தாய் மற்றும் சேய் நலப் பிரிவின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆறு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 ஆம்புலன்ஸ்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன. தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்த தளத்தில் இருந்த 15 குழந்தைகளில் ஒரு குழந்தையை மருத்துவர் ஒருவர் மீட்ட நிலையில் 14 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.