இன நல்லிணக்கமும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களால் இல்லாதொழிந்தது – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களால் உயிரிழப்புக்கள் மாத்திரம் ஏற்படவில்லை. இன நல்லிணக்கமும் இல்லாதொழிந்தது.தேசிய நிகழ்வுகள் ஊடாக இன நல்லிணக்கம் தற்போது மீள கட்டியெழுப்பப்படுகிறது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

நீர்கொழும்பில் புதன்கிழமை (26) நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா என்பது நாட்டின் இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் பிறிதொரு அரச நிகழ்வாகும். நாட்டின் சர்வ மதங்களும் அமைதி மற்றும் கருணையையே போதிக்கின்றன. ஆகவே மத நிகழ்வுகளுக்கு அரசாங்கம் என்றும் முன்னுரிமையளிக்கும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களால் உயிரிழப்புக்கள் மாத்திரம் இடம் பெறவில்லை. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கவும், சகவாழ்வும் இல்லாதொழிந்தது. கடந்த காலங்களில் திட்டமிட்ட வகையில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.

பாரிய போராட்டத்தின் பின்னர் நாட்டில் இன நல்லிணக்கம் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த ஒருமைப்பாடு தொடர்ச்சியாக பேணப்படும். இன நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படும் என்றார்.