செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: மூன்று பணியாளர்கள் உயிரிழப்பு

 

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில் பயணித்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஏமன் கடலோரப் காவல் படை மற்றும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தன்சானியக் கொடியுடன் ஓமானின் சலாலா துறைமுகத்திலிருந்து ஜிபூட்டி நோக்கிப் பயணித்த ‘திஹாமா’ என்ற சிறிய சரக்குக் கப்பலே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இருவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், ஹூதி அமைப்பு இதுவரை இதற்கு உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.

சவூதி அரேபியாவிற்கு எதிராக ஹூதி அமைப்பினர் செங்கடலில் கடற்படை முற்றுகையை அறிவித்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக செங்கடல் வழியிலான சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் மீண்டும் பதற்றமும் பாதுகாப்பற்ற சூழலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.