மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட 3000 இற்கும் மேற்பட்ட தொழில்வல்லுநர்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக வரிச்சுமை மற்றும் தொழில்சார் சிக்கல்கள் காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு 2000 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லத் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
.
மேற்படி தரவுகளின் படி, 2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 1489 நிபுணத்துவ மருத்துவர்கள் (Specialists) இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக சுமார் 2,500 மருத்துவர்கள் அரசுச் சேவையைக் கைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் இதனால் அரசுக்கு ரூபாய் 1200 கோடிக்கும் அதிகமான (12 பில்லியன் ரூபாய்) நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மயக்கவியல், அவசர சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் இதய நோயியல் ஆகிய பிரிவுகளின் நிபுணத்துவ மருத்துவர்கள் பற்றாக்குறையால் கிராமப்புற மற்றும் பிராந்திய அரசு மருத்துவமனைகளின் இயக்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனுடன் உயர் கல்வி மற்றும் ஆய்வுக் விடுப்பு பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று ஒப்பந்தப்படி மீண்டும் இலங்கை திரும்பாத பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளதாகப் பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தை மீறி வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்த பேராசிரியர்களிடமிருந்து அரசுக்கும் பல்கலைக்கழக அமைப்பிற்கும் சேர வேண்டிய தொகை ரூபாய் 340 கோடி (3.4 பில்லியன் ரூபாய்) எனத் தெரியவந்துள்ளது.



