உக்ரைன் நாட்டில் ஒடேசா பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்றின் மீது ரஷ்யா நேற்று வியாழக்கிழமை (13) நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ரயிலின் எஞ்ஜின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ரயில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதன்போது ரயிலின் முன்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் அதேவேளை ரயிலினுள் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2022 பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதோடு இரு நாட்டுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதில்தாக்குதல் நடத்தி வருகிறபோதும் அதிகப்படியான இழப்பினை உக்ரைன் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆயுத, நிதி உதவிகளை செய்து வருகிறது.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஈடுபட்டார். எனினும், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே மோதல் தீவிரமாகிவந்தது.
இச்சந்தர்ப்பத்திலேயே உக்ரைனில் பயணித்துக்கொண்டிருந்த ரயிலை இலக்குவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது



