ஈரோடு: நடிகர் விக்ரம் அண்மையில் ‘லார் கிப்பன்’ என்ற அரிய வகை குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த குரங்கை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். இது எப்படி விக்ரம் கைக்கு வந்தது.. என்று கேள்விகள் எழுந்துது. இதுபற்றி விக்ரமிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அந்த குரங்கு ஈரோட்டை சேர்ந்த தொழில் அதிபர் வைத்திருந்தது தெரியவந்தது. அவர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய காடுகளில் காணப்படும் வாலில்லா குரங்கு லார் கிப்பன். இதன் கை மற்றும் கால்களின் முன் பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும். முகத்தைச் சுற்றி மெல்லிய வெள்ளை நிற முடி வளையம் இருக்கும். உடல் முடி கருப்பு, பழுப்பு அல்லது வெளிர்ப் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
இந்த குரங்கு மரங்களில் மிக வேகமாக தாவி செல்லும் அசாத்திய திறமை படைத்தவை ஆகும். இவற்றின் சத்தம் காட்டின் பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும். தனது துணையுடனே வாழ்வதை இந்த லார் திப்பன் குரங்கு விரும்பும். இந்த குரங்கை சர்வதேச சட்டங்களின்படியும் இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படியும் வீடுகளில் வளர்ப்பது சட்டவிரோதமாகும். அழியும் நிலையில் உள்ள இந்த அரியவகை குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி வெளியிட்டார். வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்ட இந்த குரங்கை எப்படி வளர்க்கிறார்? என்று எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை வனத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணையை நடத்தினர். அப்போது அவர், ‘தன்னுடைய உறவினர் சி.கே.ரங்கநாதன் பண்ணை வீட்டில், அந்த குரங்குடன் வீடியோ எடுத்து பதிவிட்டதாக கூறினார். இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சி.கே.ரங்கநாதன் வீட்டுக்கு சென்றனர். அங்கு லார் கிப்பன் வகை குரங்கு இல்லை என உறுதி செய்தனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, அந்த குரங்கை கொடுத்த ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த தொழில் அதிபர் கேசவநாதன் என்பவரிடம் திரும்பி கொடுத்து விட்டதாக சி.கே.ரங்கநாதன் கூறினாராம். இதையடுத்து பெருந்துறையில் உள்ள கேசவநாதன் பண்ணை வீட்டுக்கு சென்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அவர், மணிப்பூரை சேர்ந்த லைசுராம் என்பவரிடம் இருந்து 3 ‘லார் கிப்பன்’ குரங்குகளை வாங்கியதாக கூறினார். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் அந்த குரங்கு பதிவு செய்துள்ளதும் தெரியவந்தது. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி அரியவகை விலங்குகளை வாங்கினால், ஒருமாத காலத்துக்குள் பதிவு செய்ய வேண்டும். ஆனால் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி இந்த குரங்குகளை கேசவநாதன் வாங்கினாராம்.. பின்னர் அவர் கடந்த 9-ந்தேதிதான், ஈரோடு மாவட்ட வனத்துறையிடம் ஆன்லைனில் இந்த குரங்குகளின் விவரத்தை பதிவிட்டாராம்.. மேலும் ஒரு குரங்கு இறந்ததையும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஈரோடு ரோஜா கார்டன் பகுதியில் உள்ள ஈரோடு மாவட்ட வனத்துறை சார்பில், நேரில் ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று மாலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் கேசவநாதன் நேரில் ஆஜராகி தன்னிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பித்து, விளக்கம் அளித்தார். இதன் பின்னர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள், குரங்கை பதிவு செய்ததில் ஏற்பட்ட தாமதத்துக்காகவும், ஒரு குரங்கு இறந்தது பற்றி முறையான தகவல் தெரிவிக்காதது குறித்தும், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கேசவநாதன் மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.



