சிங்கப்பூரில் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையிலிருந்து தப்பிக்க, மீன்பிடிப் படகின் ஊடாக சட்டவிரோதமாக அந்நாட்டை விட்டு தப்பியோடிய நபரொருவர், 24 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டதோடு, அவருக்கு எதிராக மேலும் சில குற்றங்களுக்காக புதிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர் போலி அடையாளங்களுடன் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்துக்குள் பிரவேசித்தபோது குடிநுழைவுச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டான் கி வீ (Tan Khi Wie) என்ற இந்த 58 வயது நபர் கென் ஸ்ரோனா என்ற பொய்யான பெயரில் இந்தோனேசிய கடவுச்சீட்டை பயன்படுத்தி விமான நிலையத்துக்குள் நுழைந்தபோது விமான நிலைய அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையையடுத்து, விசாரணைக்குட்படுத்த போது அவர், 24 ஆண்டுகளுக்கு முன், 2002இல் சிங்கப்பூரில் சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதி என்பது தெரியவந்துள்ளது.
24 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வசித்தபோது மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்காக, 2002இல் டான் கி வீக்கு அந்நாட்டில் 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அந்த தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக டான் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அத்துடன், அந்தத் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் சிங்கப்பூரை விட்டு சட்டவிரோதமாக வெளியேறினார்.
2003 ஜனவரி மாதம் நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையிலும் டான் முன்னிலையாகவில்லை. இதனால் அவரை கைது செய்யுமாறு பெப்ரவரி மாதம் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2002 ஆகஸ்ட் மற்றும் 2003 ஜனவரி காலப்பகுதியில் டான் மீன்பிடிப் படகின் மூலம் சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறினார். முதலில் மலேசியாவின் ஜோகூரில் உள்ள பாசிர் கூடாங் பகுதிக்குச் சென்றார். அடுத்து அங்கிருந்து தாய்லாந்துக்கும் பிறகு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கும் சென்று அங்கேயே தொடர்ந்து வசித்து வந்ததாக ஐ.சி.ஏ நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
2011 முதல் 2016 வரையான காலகட்டத்தில் கேன் ஸ்ரோனா என்ற போலியான பெயரில் டான் இந்தோனேசியா கடவுச்சீட்டை பயன்படுத்தி பல முறை சிங்கப்பூருக்கும் வேறு நாடுகளுக்கும் சென்று திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வைத்து, குடிவரவுச் சோதனையைக் கடக்க முடியாமல் அப்பகுதியில் டான் கைது செய்யப்பட்டார்.
கேன் ஸ்ரோனா என்ற பெயரில் கைதான டானுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் பழைய சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக மேலும் சில புதிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (11) வெளியான சிங்கப்பூர் நீதிமன்றப் பதிவுகளின்படி, போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தியமை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டை சமர்ப்பிக்கத் தவறியமை, சட்டவிரோதமாக வெளியேறுதல் உட்பட குடிவரவுச் சட்டத்தின் கீழ் 5 குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் அவருக்கு 11 மாதங்களும் 15 வாரங்களும் என்ற கால அளவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சிறைத் தண்டனையானது, 2002இல் டானுக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறைத் தண்டனையை அவர் அனுபவித்து முடித்த பிறகே தொடங்கும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.


