எம்மில் சிலருக்கு வறட்டு இருமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும். அத்தகைய தருணங்களில் தோலில் கட்டிகளோ அல்லது சோர்வோ ஏற்பட்டால்… இத்தகைய அறிகுறி சர்கோயிடோசிஸ் எனும் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் அதீத செயல்பாட்டின் காரணமாக ஏற்படும் பக்க விளைவு என அவதானிக்கலாம். இதற்கு நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
வறட்டு இருமல், மூச்சு திணறல், நெஞ்சக வலி, சோர்வு ,எடை குறைவு, பார்வை திறனில் மாற்றம், தோல் சிவத்தல், தோலில் கட்டிகள் ஏற்படுதல், பலவீனம்.. ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால், உங்களுடைய உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு இயல்பான அளவைவிட கூடுதலாக செயல்படுவதால்.. புற்றுநோய் அல்லாத கட்டிகள் நுரையீரல் மற்றும் நிணநீர் முனைகளில் உண்டாகும் அரிதான நோய் பாதிப்பாகும்.
தோல், கண்கள், நுரையீரல், இதயம், கல்லீரல், மண்ணீரல், நிணநீர் முடிச்சுகள்… ஆகிய இடங்களில் இத்தகைய ‘கிரானுலோமா’ என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் கட்டிகள் உண்டாகிறது. இதன் காரணமாக மூட்டு வலி , இரவு நேரத்தில் வியர்த்தல் ,தசை பலவீனம் அடைதல் .. உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.
மரபணு காரணிகள், சுற்றுச்சூழல் காரணிகள், தொற்று பாதிப்பு ஆகிய காரணங்களால் இத்தகைய நோய் குறி ஏற்படுவதாகவும், இத்தகைய பாதிப்பை பெண்களை விட ஆண்கள் சற்று அதிக அளவில் உணர்ந்து சிகிச்சை பெறுவதாகவும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து முழுமையான சிகிச்சையை பெறவில்லை என்றால்… நுரையீரல், சிறுநீரகம், இதயம், நரம்பு மண்டலம் ஆகியவற்றை கடுமையாக பாதித்து உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும்.
எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், பி இ டி ஸ்கேன் , திசு பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மூலம் இத்தகைய பாதிப்பை துல்லியமாக அவதானித்து, நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ள பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனுடன் பாதிப்படையும் உறுப்புகளை பொறுத்து இயன்முறை சிகிச்சை உள்ளிட்ட துணை சிகிச்சைகளையும் வைத்தியர்கள் பரிந்துரைக்கலாம்.



