ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதால் பதற்றம் தொடர்கிறது.
இருதரப்பு இடையிலான மோதலை தவிர்க்க ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதே வேளையில், சர்வதேசக் கடல்சார் வர்த்தகப் பாதைகளுக்கு இடையூறு விளைவித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரானுக்கு அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில்தான் உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரானிய கடற்படையால் ஆபத்து நேரிடக் கூடாது என்பதற்காக, அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களைப் பிராந்திய எல்லைக்கு அருகே கொண்டு வந்துள்ளதாக ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் இந்த நகர்வு, ஈரானுக்குக் கொடுக்கும் நேரடி அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டாலும், மறுபுறம் போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மோதல் போக்கு, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை மற்றும் வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“போர் மரணங்களுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும்” – ட்ரம்ப் புதிய நிபந்தனை
ஈரானின் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அமெரிக்கர்களுக்கு ஈரானிடம் இருந்து இழப்பீடு கோரப்படும் என்றும், வருங்காலப் பேச்சுவார்த்தைகளில் இது முக்கிய நிபந்தனையாக சேர்க்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் மோதலில் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் பிரதிநிதிகள் கோரியதாகத் தெரிவித்த ட்ரம்ப், அதற்குப் பதிலடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரானின் சாலையோர வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் பல்வேறு மோதல்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் கடுமையாகக் காயமடைந்தவர்களுக்காக ஈரானிடம் இழப்பீடு கோருகிறேன். யூ.எஸ்.எஸ் கோல் போர்க்கப்பல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், போர்களில் பலியான ஆயிரக்கணக்கானோரின் குடும்பங்களுக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 50 ஆண்டுகளில் ஈரானில் நடைபெற்ற போராட்டங்களின் போது அந்நாட்டு அரசால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கும், கடந்த ஐந்து மாதங்களில் பலியான 52,000 பேரின் குடும்பங்களுக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரானுடன் அமெரிக்கா நடத்தும் எந்தவொரு எதிர்காலப் பேச்சுவார்த்தையிலும் இந்த இழப்பீட்டுக் கோரிக்கையை உறுதியாக முன்வைக்குமாறு தனது பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.



