தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் கடுமையான வானிலை மாற்றத்தை சந்தித்து திடீரென 300 அடி உயரம் கீழே சரிந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஆகஸ்ட் 4-ம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 4 விமான பணியாளர்கள் உட்பட 17 பேர் முதுகெலும்பு மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்தனர். இதற்கிடையில், இந்த விமானத்தை இயக்கிய விமானி நடத்திய போதைப்பொருள் சோதனையில் தோல்வியுற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது குறித்துப் பதிலளித்துள்ள டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், விமானிகளுக்கு பிந்தைய பரிசோதனைகள் விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தது. இருப்பினும், சம்பந்தப்பட்ட சோதனையின் முடிவுகள் தங்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக பகிரப்படவில்லை என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஏர் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
டிஜிசிஏ வழிகாட்டுதலின்படி ஊழியர்களுக்கு வழக்கமான போதைப்பொருள் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதற்கிடையே, விமானத்தில் விபத்து ஏற்பட்ட பிறகும் மீதமுள்ள ஒரு மணி நேர பயணத்தின் போது பயணிகளுக்குத் தைரியமாகவும் சிறப்பாகவும் உதவிய விமான பணியாளர்களின் துணிச்சலை சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு பாராட்டியுள்ளார்.



