மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தனர்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ஹெலிக்கொப்டர் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) சிறைச்சாலை வளாகத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சனிக்கிழமை (01) பிற்பகல் சிறைச்சாலை வளாகத்திலுள்ள கட்டிடமொன்றில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சிறைச்சாலையின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) மற்றும் விமானப்படையினர் இணைந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மஹர சிறைச்சாலைக்குள் பிரவேசிப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் தற்போது உள்ளதால், எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அங்கு ஒரு விசேட குழுவை அனுப்பி வைக்குமாறு சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு (CPRP), இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் (HRCSL) அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயுதமேந்திய படையினர் மஹர சிறைச்சாலை மற்றும் அதனை அண்மித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
மஹர சிறைச்சாலை பதற்ற நிலைமையை தொடர்ந்து சிறைச்சாலை முன்பாக பிரதேசவாசிகள் மற்றும் கைதிகளின் உறவினர்கள் பாதுகாப்பு தரப்புடன் தர்க்கம்.
சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையைக் கருத்திற் கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாகத் தலையிட வேண்டும் என அந்த அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார மற்றும் சிறைச்சாலை விவகாரங்களுக்கான பணிப்பாளர் சந்திக லொகுஹெட்டி ஆகியோரின் அவசரக் கவனத்திற்கும் இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதையும், நிலைமையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் எவ்வித தாமதமுமின்றி உடனடியாகச் செயற்பட வேண்டும் என அக்குழு வலியுறுத்தியுள்ளது.



