சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36 பேர் உயிரிழப்பு; 163 பேர் காயம்!

 

நாட்டில் கடந்த ஐந்து வாரங்களில் நீர்கொழும்பு, மஹர, கொழும்பு மெகசின்,குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு பள்ளஞ்சேனை ஆகிய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல்களினால் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 163 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையில் மோதல்கள் திடீரென தோற்றம் பெறுகின்ற நிலையில் நாட்டில் உள்ள சகல சிறைச்சாலைகளுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மற்றும் பாதாளக்குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் சிறைச்சாலைகளுக்குள் திட்டமிட்ட வகையில் இவ்வாறான மோதல்கள் ஒருதரப்பினரால் உருவாக்கப்படுவாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை மதாதம் 5 மற்றும் 6 ஆகிய இரு தினங்களில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களினால் 10 சிறைச்சாலை உத்தியோகத்தர்களும், 22 கைதிகளும் உயிரிழந்தனர்.இந்த மோதலினால் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இவ்வாறான பின்னணியில் சனிக்கிழமை (1) மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 1 கைதி உயிரிழந்த நிலையில்,09 கைதிகள் காயமடைந்தனர்.

இராணுவம், கடற்படை மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் குறுகிய நேரத்துக்குள் இந்த மோதல் கட்டுப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 1 கைதி உயிரிழந்த நிலையில் 11 கைதிகள் காயமடைந்தனர். நேற்று முன்தினம் (7) காலை குருவிட்ட சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 02 கைதிகள் உயிரிழந்த நிலையில் 15 கைதிகள் காயமடைந்தனர்.அன்றைய தினமே நீர்கொழும்பு பள்ளஞ்சேனை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகாத நிலையில் 28 கைதிகள் காயமடைந்தனர்.

இதற்கமைய கடந்த ஐந்து வாரங்களில் ஐந்து சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல்களில் 36 உயிரிழந் நிலையில், 163 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை மற்றும் சிறைக்கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்தரையாடலொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் (07) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளிலுமுள்ள கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன்புரி நடவடிக்கைகள், அவசர காலங்களில் செயற்பட வேண்டிய முறைமைகள் குறித்து ஆராய்வதற்கு கூட்டுப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.