கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவ ஆரம்பித்த கொரோனா சர்வதேச அளவில் எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் நினைவு இருக்கும். வேக்சின், தீவிர தடுப்பு நடவடிக்கைக்கு பிறகே கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதற்கிடையே இப்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2019ல் பரவ ஆரம்பித்த கொரோனா சர்வதேச அளவில் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் நினைவில் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பெரியளவில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. இதற்கிடையே நடப்பாண்டில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகள் குறித்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு கொரோனா இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டில் இருந்து 20 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், அவை அனைத்துமே ஓமிக்ரான் வேரியண்ட் என்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது அல்ல என்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் 15 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சுகாதார துறை இது குறித்து மருத்துவத்துறை இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம் கூறுகையில், “புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு 20 மாதிரிகளை அனுப்பினோம். அவை அனைத்துமே ஓமிக்ரான் RF.5 துணை வேரியண்ட் என்பது உறுதியாகியுள்ளது. இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் அல்ல. எனவே மக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம். மக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். உடல்நலக்குறைவு இருந்தால் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும்” என்றும் அவர் அறிவுறுத்தினார்.
யாருக்கு ஆபத்து? 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், சிறுநீரக நோய், புற்றுநோய் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் போன்ற உயர் ஆபத்து பிரிவை சேர்ந்தவர்கள் பெரிய கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது அதிக இணை நோய் ஆபத்து இருப்போர் மற்றும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் சோமசுந்தரம் தெரிவித்தார். அதேநேரம் வழக்கமான கண்காணிப்பு தொடர்ந்து மாநிலம் முழுக்க நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
சமீபத்தில் ஆந்திர பிரதேசத்திலும் RF.5 வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளிலும் இந்த துணை வேரியண்ட் இப்போது பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு கொரோனா தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2025ல் 1,250 பேருக்கும் 2024ல் 990 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி பார்த்தால் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்த பிறகு மொத்தமாக 2,557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பரவி வரும் RF.5 துணை வகை லேசான பாதிப்பையே ஏற்படுத்துகிறது. இது வேகமாகவும் பரவுவதில்லை என்பது ஆறுதல் தரும் செய்தி! காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



