நேபாளத்தின் கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் உயிரிழ*தோர் எண்ணிக்கை 734ஆக அதிகரித்துள்ளது. நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களில் 108 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நேபாள பெரு வெள்ளம் ஏற்பட்ட நாள் முதல் தற்போது வரை 275 இந்தியர்களை காணவில்லை என வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி இதுவரை 8,186 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
திபெத் – நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஏராளமானோர் மாயமாகியும் உள்ள நிலையில், நிலைமையை ஆய்வு செய்வதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா தெரிவித்துள்ளதாவது: திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள ஜிராங் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இயற்கை பேரிடர் காரணமாக நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, காணாமல் போன சீனர்கள் மற்றும் வெளிநாட்டினரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளை அறிவியல் பூர்வமான திட்டமிடலுடன் முடுக்கிவிட முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு ஜின்ஹுவா தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது.
திபெத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் திபெத்தில் 550-க்கும் மேற்பட்டோரும், நேபாளத்தில் 100 சீனர்களும் மாயமாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 555 சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 1,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் சொந்த நாட்டின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.
நேபாள வெள்ளத்தில் இதுவரை 579 பேர் உயிரிழந்துள்ளனர். 2,381 பேரைக் காணவில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நிவாரணப் பொருட்களுடன் 3-வது விமானம் நேற்று காத்மாண்டு சென்றது.
நேபாளத்தில் அமைந்துள்ள இமயமலையின் துணைத் தொடரான லாங்டாங் ஹிமாலின் மிக உயரமான பனிச்சிகரம் லாங்டாங் லிருங். அங்குள்ள பனிப்பாறைகள் உருகி பனிச் சிகரத்துக்குள் மிகப்பெரிய ஏரி உருவாகி இருந்தது.
கடந்த 26-ம் தேதி லாங்டாங் லிருங் பனிச்சிகரத்தில் சுமார் 1.5 கி.மீ. அகலம் கொண்ட பனிமலை உடைந்து ஏரியில் விழுந்தது. இதனால் ஏரி உடைந்து சீனாவின் திபெத் பகுதி மற்றும் நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. திபெத் பகுதியில் 5 பேர் உயிரிழந்தனர். 558 பேரைக் காணவில்லை. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர்.
நேபாளத்தில் போடேகோசி, திரிசூலி நதிகளில் பல மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ரசுவா, தாதிங், நுவாகோட் ஆகிய 3 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ள பாதிப்பால் நேபாளத்தில் இதுவரை 579 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. 644 வெளிநாட்டினர் உட்பட 2,381 பேரைக் காணவில்லை.
இந்நிலையில், சீனா – நேபாள எல்லையில் சோச்சென் கோலா, புரேபு சாங்போ நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பனிப்பாறைகள் உருகி மிகப்பெரிய ஏரி உருவாகி இருந்தது. இந்த ஏரி நேற்று உடைந்து திபெத், நேபாள நதிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இரண்டாவது ஏரி உடைந்து நேபாள நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நதிகளின் கரையோரம் வசித் தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் இந்த முறை உயிரிழப்பு தடுக்கப்பட்டு உள்ளது.
நேபாளத்தின் திரிசூலி நதியில் புதிதாக நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பணியில் 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கடந்த 26-ம் தேதி பெருவெள்ளத்தின் போது நீர் மின் நிலைய கட்டுமானங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்துக்குப் பிறகு 250 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
எனினும், சுரங்கத்தில் சுமார் 100 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அங்கு மீட்புப்பணி மேற் கொள்ள இந்தியாவின் உதவியை நேபாள அரசு நாடி உள்ளது.
நேபாள அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெள்ளம் பாதித்த பகுதிகளில் போலீஸ், ராணுவம், ஆயுதப் படை, தேசிய பேரிடர்மீட்புப் படையைச் சேர்ந்த 13,295 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 15 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இதுவரை 3,742 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். காயம் அடைந்தவர்கள் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு நேபாள அரசு தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று கூறுகையில், ‘‘சீன எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சிக்கிய 400 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் நேபாளம் வழியாக இந்தியாவுக்கு திரும்ப உள்ளனர். நேபாளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட்டிருந்த 320 இந்தியர்களைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்கிறது’’ என்றார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு உதவ கடந்த 26-ம் தேதி 10 டன் நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானப் படை விமானம் காத்மாண்டுவுக்குச் சென்றது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 37.5 டன் நிவாரணப் பொருட்களுடன் 2-வது ராணுவ விமானம் காத்மாண்டு சென்றடைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மருந்துகள், உணவுப் பொருட்கள், கூடாரங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட் களுடன் 3-வது இந்திய ராணுவ விமானம் காத்மாண்டுவுக்குச் சென்றது.
தமிழர்களை வரவேற்ற ஜெய்சங்கர்
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விமானம் மூலம் நேற்று டெல்லி திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். அப்போது மத்திய அமைச்சருக்கு 21 பேரும் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, ‘‘நேபாளத்தில் சுமார் 320 இந்தியர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. 85 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். முதல் கட்டமாகத் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் டெல்லி திரும்பி உள்ளனர். இதற்காக நேபாள ராணுவத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நேபாளத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கி வருகிறது. அங்குத் தற்காலிக பாலங்களை அமைக்க இந்தியாவின் உதவியை நேபாளம் கோரி உள்ளது. இதற்காக இந்திய வல்லுநர்கள் நேபாளத்துக்கு அனுப்பப்பட உள்ளனர். மருத்துவக் குழுவினரும் நேபாளத்துக்குச் செல்வார்கள்.
இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.



