மும்பாயிலிருந்து பயணத்தை ஆரம்பித்த சுற்றுலாக் கப்பலொன்று 862 சுற்றுலாப் பயணிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கப்பலில் வருகை தந்துள்ள 862 சுற்றுலாப் பயணிகளும் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களை பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சர்வதேச சுற்றுலாக் கப்பல்கள் வருகை தருவது, வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் பிராந்திய பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை முன்னிட்டு துறைமுகப் பகுதியில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல்வழியாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதன் மூலம், வடக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்று, சமய மற்றும் இயற்கை சுற்றுலாத் தலங்களுக்கு சர்வதேச அளவில் மேலும் கவனம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



