ஆன்லைன் ஷாப்பிங்கில் விசித்திரம் – 250 கோடி அனிமே பொருட்களை ஆர்டர் செய்து ரத்து செய்த பெண்!

 

தினசரி வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தைக் (Stress) குறைக்க மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு வழியைக் கையாள்வார்கள். சிலர் இசை கேட்பார்கள், சிலர் சுற்றுலா செல்வார்கள். ஆனால், ஜப்பானைச் சேர்ந்த ஒரு பெண் தனது மன அழுத்தத்தைப் போக்க, ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஆர்டர் செய்து, பின்னர் டெலிவரிக்கு முன் ரத்து செய்யும் விசித்திரமான மோசடியில் ஈடுபட்டு டோக்கியோ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

238 போலி கணக்குகள்.. 2,000 முறை ஆர்டர்!
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரைச் சேர்ந்த 32 வயதான மாயு யோஷிதா (Mayu Yoshida) என்ற பெண் தான் இந்த விசித்திர வழக்கின் நாயகி. இவர் ஜப்பானின் புகழ்பெற்ற மங்கா மற்றும் அனிமேஷன் காமிக்ஸ் வெளியீட்டு நிறுவனமான ‘ஷுயேஷா’ (Shueisha) நடத்தி வரும் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளமான Jump Characters Store-ஐ தனது விளையாட்டு மைதானமாக மாற்றியுள்ளார்.உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ‘ஒன் பீஸ்’ (One Piece), ‘நருடோ’ (Naruto), மற்றும் ‘டிராகன் பால்’ (Dragon Ball) போன்ற அனிமேஷன் தொடர்களின் பிரத்யேகப் பொருட்களை (Anime Merchandise) வாங்குவதில் மாயு யோஷிதாவிற்கு அதீத பிரியம் இருந்துள்ளது.

இதற்காக அவர் தனது உண்மையான விபரங்களை மறைத்து, சுமார் 238 போலி கணக்குகளை (Fake Accounts) ஆன்லைன் ஸ்டோரில் உருவாக்கியுள்ளார். கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த போலி கணக்குகள் மூலமாக 2,000-க்கும் மேற்பட்ட முறை அடுக்கடுக்காகப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

258 கோடி ரூபாய் மோசடி நடந்தது எப்படி?
ஜப்பானில் ஆன்லைன் ஷாப்பிங்கில் மிகவும் பிரபலமாக இருக்கும் Cash on Delivery (COD) எனப்படும், பொருட்கள் கையில் கிடைத்தவுடன் பணம் செலுத்தும் முறையை இப்பெண் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். இவர் ஆர்டர் செய்த ஒட்டுமொத்த பொருட்களின் சந்தை மதிப்பு ஜப்பானிய கரன்சியில் 4.3 பில்லியன் யென், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹258 கோடி ஆகும். ஒவ்வொரு முறையும் பொருட்கள் தீர்ந்துபோவதற்கு (Sold out) முன்பாக, போட்டி போட்டுக்கொண்டு மொத்தமாகப் பொருட்களை கார்ட்டில் (Cart) சேர்த்து ஆர்டர் செய்துவிடுவார். ஆனால், அந்தப் பொருட்கள் டெலிவரி செய்யப்படுவதற்குக் சில நிமிடங்களுக்கு முன்பாகவோ அல்லது டெலிவரி ஊழியர் வாசலில் வந்து நிற்கும் போதோ அனைத்து ஆர்டர்களையும் ஒட்டுமொத்தமாக ரத்து (Cancel) செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

மன அழுத்தம் குறைந்தது – போலீசில் பெண் வாக்குமூலம்
தொடர்ந்து ஒரே மாதிரியான கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்கள் வந்து திடீரென ரத்து செய்யப்படுவதைக் கவனித்த ஷுயேஷா நிறுவனம், இதுகுறித்து டோக்கியோ காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது. சைபர் பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாயு யோஷிதா சிக்கினார்.கைது செய்யப்பட்ட பின் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் உளவியலாளர்களைக் கூட யோசிக்க வைத்துள்ளது. “எனக்கு அனிமேஷன் பொருட்கள் என்றால் பிடிக்கும். என் தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான மன அழுத்தம் இருந்தது. ஆன்லைனில் பிற வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு முன்னால், நான் முந்திக்கொண்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களைப் புக் செய்யும் போது என் மன அழுத்தம் முழுமையாகக் குறைந்தது. ஏதோ ஒரு பெரிய போரில் வென்றது போன்ற புத்துணர்ச்சியும், திருப்தியும் எனக்குக் கிடைத்தது. அதற்காகவே இதைச் செய்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

நிறுவனத்திற்கு ஏற்பட்ட உண்மையான பாதிப்பு என்ன?
விளையாட்டாகவோ அல்லது மன அழுத்தப் பிரச்சனையாலோ இப்பெண் இதைச் செய்திருந்தாலும், வணிக ரீதியாக அந்த நிறுவனத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாயு யோஷிதா பொருட்களை முடக்கியதால், அந்தப் பொருட்களை நிஜமாகவே வாங்க நினைத்த உண்மையான அனிமேஷன் ரசிகர்களுக்கு அவை கிடைக்காமல் போயின.மேலும், பொருட்களைத் தயாரித்து, பேக் செய்து, டெலிவரிக்கு அனுப்பி, மீண்டும் அவை ரத்தாகி கிடங்கிற்குத் திரும்பியதால் ஏற்பட்ட போக்குவரத்து மற்றும் கிடங்கு பராமரிப்புச் செலவு (Shipping & Logistics cost) காரணமாக மட்டுமே அந்த நிறுவனத்திற்கு நேரடியாகச் சுமார் 7.5 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் சுமார் ₹48 லட்சம்) நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, வணிகத்தை மோசடியாக முடக்கிய குற்றத்திற்காக அவர் மீது ஜப்பானிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மன அழுத்தத்தின் உச்சக்கட்டமாக ஒரு பெண் 250 கோடி ரூபாய்க்குப் பொருட்களை புக் செய்து விளையாடிய இந்தச் சம்பவம் ஆன்லைன் வர்த்தக உலகையே அதிர வைத்துள்ளது.