கனடாவில் வேலைவாய்ப்புகூறிய இலங்கையர் மூவர் கிளிநொச்சியில் கைது

 

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்கள் மூவரை எத்தியோப்பியாவுக்கு அனுப்பி, அங்குள்ள பாதாள உலகக் குழுவினரிடம் சிக்க வைத்த சம்பவம் தொடர்புடைய கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடற்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு வழங்கிய தகவலுக்கு அமைய மேற்படி சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த 25, 26 மற்றும் 27 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சியைச் சேர்ந்த தரகர் மூலமாக டுபாய் வழியாக எத்தியோப்பியா சென்று, அங்கிருந்து கனடாவுக்குச் செல்ல இவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக விமானச் சீட்டு மற்றும் விசாவுக்காக ரூபா 64 இலட்சம் பெறப்பட்டதுடன், கனடா சென்றடைந்த பின் ஒருவரிடம் ரூபா 100 இலட்சம் வீதம் பெறுவதுக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞர்கள் எத்தியோப்பியா சென்றடைந்ததும், அங்குள்ள பாதாள உலகக் குழுவினரால் கடத்தப்பட்டனர். அவர்களை விடுவிக்க ஒருவருக்கு 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கப்பமாக கோரப்பட்டுள்ளது. இதனையடுத்தே, கடத்தப்பட்ட இளைஞர்களின் உறவினர்களால் கிளிநொச்சியிலிருந்த நபரிடம் சுமார் 200 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர். இத்தியோப்பிய பொலிஸாரும் தூதரகமும் இணைந்து முன்னெடுத்திருந்த நடவடிக்கையில் கடத்தப்பட்ட இளைஞர்கள் மூவரும் மீட்கப்பட்டனர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 4 பாகிஸ்தானியர்களும் எத்தியோப்பியர் ஒருவரும் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மூவரிடமும் எத்தியோப்பியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னர் அவர்களை நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர். கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடற்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.