சமைப்பதற்கு முன்பு அரிசியை கழுவுவது வெறும் பழக்கம் மட்டுமே கிடையாது. இப்படி செய்வதால் அதிகப்படியான மாவுச்சத்து, தூசி நீங்குவது மட்டுமின்றி பல நன்மைகள் கிடைப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கிறன. இதன் நன்மைகள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
இந்தியர்களின் தினசரி உணவு முறையில் அரிசி தவறாமல் இடம்பெறக்கூடிய உணவு பொருளாகும். ஆனால், அரிசியை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டுமா? அல்லது நேரடியாக சமைக்கலாமா? என்ற கேள்வி பலரிடம் இன்றும் உள்ளது. சிலர் அரிசியை கழுவுவதால் கிருமிகள், நச்சுப்பொருட்கள் நீங்கிவிடும் என்கின்றனர். சிலர் இதை நேரத்தை வீணடிக்கும் செயலாக பார்க்கின்றனர். உண்மையில் அரிசியை கழுவுவது பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்
பேக்கிங் செய்யப்பட்ட அரிசி பார்க்க சுத்தமாக தெரிந்தாலும், அதில் தூசி – சிறிய உமி துகள்கள் – அறுவடை மற்றும் மில்லில் அரைக்கும் போது உண்டாகும் அழுக்கு – உடைந்த சிறிய அரிசித் துண்டுகள் போன்றவை இருக்க செய்யலாம். எனவே, சமைப்பதற்கு முன் சுத்தமான தண்ணீரில் அரிசியை 2 முதல் 3 முறை கழுவுவது இந்த அசுத்தங்களை நீக்க உதவுகிறது.
அரிசியை மில்லில் அரைக்கும் போது, அதன் மீது தளர்வான மாவுச்சத்து தூள் படியும். அரிசியை கழுவும்போது அந்த மாவுச்சத்து அகற்றப்படுவதாலே தண்ணீர் வெள்ளையாக மாறுவதற்கு காரணம். இந்த கூடுதல் ஸ்டார்ச் நீங்குவதால், சமைத்த அரிசி மேலும் உதிரியாக மாறும், அரிசி ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும், குழையாமல் சமைக்கவும் உதவும். இது பாஸ்மதி, ஜாஸ்மின் போன்ற நீளமான அரிசி வகைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
அரிசியிலும் மிகச் சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருக்கக்கூடும். இவை பேக்கிங் மற்றும் உணவு பதப்படுத்தும் செயல்முறைகளின் போது கலக்க வாய்ப்பு உள்ளது. Journal of Hazardous Materials இதழில் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டு ஆய்வின்படி, சமைப்பதற்கு முன் அரிசியை கழுவுவது பிளாஸ்டிக் மாசுபாட்டை சுமார் 20% முதல் 40% வரை குறைக்கிறது. அதேநேரம், Instant Rice-ல்(precooked) சமைக்காத அரிசியை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிக பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்
அரிசியை கழுவுவது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை முழுமையாக அகற்றும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் அது முழுமையாக உண்மை இல்லை. கழுவுவதன் மூலம் அரிசியின் மேற்பரப்பில் ஒட்டியிருக்கும் சில நச்சுக்கள் அகற்றப்படலாம். ஆனால் ஆர்சனிக் அல்லது கன உலோகங்களை முழுமையாக நீக்காது. ஏனெனில் ஆர்சனிக் பெரும்பாலும் பயிரிடப்படும்போதே அரிசி மணிக்குள் இயற்கையாகவே உறிஞ்சப்பட்டிருக்கும்.
அரிசியை அடிக்கடி அல்லது பலமுறை கழுவுவதன் மூலம், அதில் உள்ள சில சத்துக்கள் தண்ணீருடன் கரைந்து வெளியேறிவிட வாய்ப்புள்ளது. குறிப்பாக, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சேர்க்கப்பட்ட (Fortified) அரிசியைக் கழுவும்போது, அதில் உள்ள வைட்டமின் B1 (தயமின்), இரும்புச்சத்து மற்றும் பிற B வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் சற்று குறையலாம்.
ஆனால், நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் பாலிஷ் செய்த சாதாரண அரிசியைப் பொறுத்தவரை, இப்படிச் சத்துக்கள் இழக்கப்படுவது மிக மிகக் குறைவே.
தேவையான அளவு அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொள்ளவும். சுத்தமான குடிநீரை ஊற்றவும். உங்கள் கையால் அரிசியை மென்மையாகக் கிளறவும்.வெள்ளையாக மாறிய தண்ணீரை வடிக்கவும். தண்ணீர் தெளிவாகும் வரை 2 முதல் 3 முறை இதை மீண்டும் செய்யவும். அதன் பிறகு வழக்கம்போல் சமைக்கலாம்.
சமைப்பதற்கு முன் அரிசியைக் கழுவுவது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு எளிய பழக்கமாகும். இது தூசு, தளர்வான மாவுச்சத்து மற்றும் சில மைக்ரோபிளாஸ்டிக்கை அகற்ற உதவுவதோடு, சமைத்த அரிசியின் தோற்றத்தையும் அமைப்பையும் மேம்படுத்துகிறது. ஆர்சனிக் அல்லது கன உலோகங்களை முழுமையாக அகற்றாவிட்டாலும், அரிசியை 2 அல்லது 3 முறை மட்டும் கழுவி சமைப்பது சுத்தம், சுவை மற்றும் தரம் ஆகிய மூன்றுக்கும் நல்ல தேர்வாக இருக்கும்.



