இந்தியா-இலங்கை 350 மில். டொலர் கடன் வசதிக்கான ஒப்பந்தம்

 

‘டித்வா’ (Cyclone Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து இந்தியாவினால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இந்திய ரூபாய் (INR) மதிப்பிலான கடன் கோடுகளுக்கான (Lines of Credit) ஒப்பந்தங்கள் இலங்கை மற்றும் இந்தியா இடையே புதன்கிழமை (05) அன்று பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

“இருதரப்பு நலன்கள் சார்ந்த விவகாரங்கள் மற்றும் இலங்கையில் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய இருதரப்புத் திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன” என இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

“இந்தக் கடன் வசதிகள், சூறாவளியின் தாக்கத்தைத் தொடர்ந்து உருவான புனரமைப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கொள்முதல் தேவைகளுக்கு ஆதரவளிக்கும்” என்றும் உயர்ஸ்தானிகரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.