தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால், பயணிகள் படகு ஒன்று சனிக்கிழமை (18) இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
மீட்புக் குழுவினர் இதுவரை 69 பேரை உயிருடன் மீட்டுள்ள போதிலும், மேலும் 83 பேர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.
ஆரம்பத்தில் படகில் 133 பேர் மட்டுமே பயணித்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மீட்கப்பட்ட பலரின் பெயர்கள் உத்தியோகபூர்வப் பட்டியலில் இல்லாததால், படகில் 179 பேர் வரை பயணித்திருக்கக்கூடும் எனப் பிரதமர் மார்க் பிலிப்ஸ் திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் நடத்திய வைத்தியப் பரிசோதனையில், படகோட்டி மற்றும் ஊழியர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தமை உறுதியாகியுள்ளது.
பணி நேரத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாலும், பயணிகளின் எண்ணிக்கையை முறைப்படுத்தத் தவறியதாலும் படகோட்டி மற்றும் ஊழியர்களைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
கயானா தலைநகர் ஜோர்ஜ்டவுனில் இருந்து போர்ட் கைடூமா பகுதிக்குச் சென்றபோது, சனிக்கிழமை இரவு 11:01 மணிக்கு படகில் இருந்து ஆபத்துச் சமிக்ஞை அனுப்புவதற்கு முன்பே படகு சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எலினா மூன்சாமி என்ற பயணி ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில,
“இராட்சத அலை ஒன்று மோதிய சில வினாடிகளிலேயே படகிற்குள் நீர் வேகமாகப் புகுந்து கவிழ்ந்தது. மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு நான் உயிர் பிழைத்தேன். ஆனால், என் 2 வயதுக் குழந்தையின் கையைப் பிடித் திருந்தும், அலையின் வேகத்தில் என் கை நழுவி குழந்தை நீரில் மூழ்கிவிட்டான்” எனப் பேரதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளுக்கு உதவ அருகிலுள்ள பிரெஞ் கயானாவில் இருந்து பிரெஞ் இராணுவம் 12 அனுபவமிக்க உயிர்காப்பு பிரிவினர், 2 வைத்தியர்கள் மற்றும் மெக்கானிக் ஒருவரை அனுப்பியுள்ளது.
கடலில் மிதந்த 17 க்கும் மேற்பட்டோரை அப்பகுதியைச் சேர்ந்த சிறிய தனியார் மீன்பிடிப் படகுகள் மீட்டுள்ளன. மீட்கப்பட்ட 15 சிறுவர்கள் உட்பட 69 பேரில் பெரும்பாலானோருக்குச் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.
“காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதிலேயே எங்கள் முழு கவனமும் உள்ளது. இன்னும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதேநேரத்தில், இந்தத் துயரச் சம்பவங்கள்அதிகாரிகளின் அலட்சியமோ, விதிமீறலோ அல்லது குற்றவியல் தவறுகளோ காரணமெனில், சம்பந்தப்பட்டவர்கள் கடும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்கள்.” கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



