ஹோர்முஸ் நீரிணையில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் கப்பல் போக்குவரத்து..!

 

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீண்டும் பழையபடி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு ஒரே நேரத்தில் சுமார் 76 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து உள்ளன.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போரினால் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz), சில நாட்களுக்கு முன் குறிப்பிட்ட நீரிணையை கடக்கும் தினசரி கப்பல்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 40-ஆக இருந்த நிலையில், சமீபத்தில் ஒரே நேரத்தில் சுமார் 76 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

4 மாத முடக்கத்திற்குப் பிறகு ஒரே நாளில் இவ்வளவு அதிகமான கப்பல்கள் இந்த நீரிணையை கடப்பது இதுவே முதல்முறை ஆகும். சமீபத்திய தூதரக முயற்சிகளால் தினசரி கப்பல் போக்குவரத்து சற்றே அதிகரித்திருந்தாலும், போருக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்து கணிசமாக குறைவாகவே உள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தொடங்கியதில் இருந்து இந்த முக்கிய கடல் வழித்தடம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் முடங்கியிருந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த உடன்பாட்டைத் தொடர்ந்து, தேங்கிக் கிடந்த வணிக மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்த வழித்தடத்தை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனிடையே கடந்த சில தினங்களில் மட்டும் 30 இந்திய சரக்குக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து இந்தியா நோக்கிப் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.