செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தைத் தமிழின அழிப்பின் நினைவகமாகப் பேணும் முன்மொழிவு, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனால் நேற்றைய (17-06-2026) சபை அமர்வில் முன்மொழியப்பட்டது.
குறித்த முன்மொழிவை முன்வைத்து உரையாற்றிய தவிசாளர் மயூரன், “இனஅழிப்பு செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட எமது உறவுகள் இன்று செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
எம்மீது நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பின் சான்றாதாரமாக இம்மயானம் காணப்படுகின்றது.
இந்நிலையில் இனஅழிப்பின் சாட்சியங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அதனை இளைய தலைமுறைக்குக் கடத்த வேண்டிய பொறுப்பும் எமக்கு இருக்கின்றது.
குறித்த இந்து மயானம் எமது சபை எல்லைக்குள் காணப்படுகின்ற நிலையில் இதனை ஒரு மயானமாகத் தொடர்ந்து பேணாமல் எம்மீதான இனஅழிப்பின் ஒரு சாட்சியகமாக நினைவகமாகப் பேணுவதற்குரிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற முன்மொழிவை முன்வைக்கின்றேன்.
அத்தோடு, குறித்த விடயம் தொடர்பில் செம்மணி சித்துபாத்தி இந்து மயான சபையினருடன் கலந்துரையாடல் செய்து அது தொடர்பான விபரங்களுடன் குறித்த முன்மொழிவை உங்களின் ஏகமனதான ஆதரவுடன் ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்காக அடுத்த சபை அமர்வில் சமர்ப்பிக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.




