அரசாங்கத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட பரிந்துரைகள்

 

மலையகத் தமிழ் சமூகத்தின் நீண்டகால கவலைகளையும் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வதற்கு ஒரு விரிவான, உறுதியான மற்றும் நிலையான தேசியக் கொள்கை கட்டமைப்பு அவசரமாக தேவைப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட முறையான கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், நீதியரசர் எல். டி. பி. தெஹிதெனிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நேற்று புதன்கிழமை கொழும்பில் ‘மலையகத் தமிழ் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்’ என்ற கருப்பொருளில் தேசிய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட மலையக மக்கள், தங்களது கடின உழைப்பால் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறினர். சுதந்திரத்தின் பின்னர் குடியுரிமையற்றவர்களாக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட இச்சமூகம், பின்னர் கொண்டுவரப்பட்ட சட்ட மூலங்கள் ஊடாக குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டமை அவர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான முக்கிய படியாகும். எனினும், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் அரசமயமாக்கப்பட்டதன் மூலம் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், மலையகத் தமிழ் சமூகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் இன்றும் தொடர்ச்சியான ஓரங்கட்டலையும் நீடித்த சமத்துவமின்மையையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

பெருந்தோட்ட சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நிலையான, ஒத்திசைவான மற்றும் நீண்டகால கொள்கைகள் அரசாங்கத்திடம் இல்லாமையே பிரதான கவலையாகும். அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் கொண்டுவந்த தற்காலிகத் திட்டங்கள் துண்டு துண்டானவையாக இருந்ததால், கட்டமைப்பு ரீதியான சவால்களுக்கு அவை போதுமான தீர்வை வழங்கவில்லை. இதன் காரணமாக பிரச்சினைகள் தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றன. நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஆணைக்குழு மேற்கொண்ட உண்மை கண்டறியும் களப்பணிகளின் மூலம், இவை வெறும் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் அல்ல, மாறாக மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சமத்துவம் சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக அணுகுமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மலையக மக்களின் உரிமைகளை உறுதி செய்ய 5 பிரதான துறைகளில் அரசாங்கம் நீண்டகால தேசியக் கொள்கைகளை வகுக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கவுள்ளது. அதற்கமைய நிலம் மற்றும் வீட்டுரிமை, தொழிலாளர் உரிமைகளும் வேலை நிலைமைகளும், அரசாங்க சேவைகளுக்கான அணுகல், கல்வி மற்றும் மனித மேம்பாடு, பொருளாதார, சமூக நல்வாழ்வு ஆகிய துறைகளில் அம்மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இக்கொள்கைகள் ஒரு தற்காலிகப் பதிலாக இருக்கக் கூடாது. மலையகத் தமிழ் சமூகம் மற்றும் தொடர்புடைய தரப்பினருடன் அர்த்தமுள்ள கலந்தாலோசனைகள் மூலம் உருவாக்கப்படும் நீண்டகால தேசிய அர்ப்பணிப்பாக இது அமைய வேண்டும். அரசாங்க நிறுவனங்கள், உள்ளுர் அதிகாரசபைகள், பிராந்திய தோட்ட நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து செயல்படுவதன் மூலமே இதற்கான நிலையான தீர்வுகளை எட்ட முடியும். நாட்டின் அரசியலமைப்பு உத்தரவாதங்களுக்கு அமைய மலையக மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்து பாடுபடும் என்றார்.