காதலிக்க மறுத்த இளம்பெண்.. கழுத்தை அறுத்து வாலிபர் செய்த செயல்-

 

தருமபுரியில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தேங்காய்மரத்துப்பட்டியை சேர்ந்த சின்னசாமி என்பவர் நகைக்கடையில் பணிபுரியும் பெண்ணை காதலிக்க வலியுறுத்தி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த நிலையில் பொது இடத்தில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளியை எவ்வாறு கைது செய்துள்ளனர் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தருமபுரி மாவட்டத்தை அடுத்த தேங்காய்மரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 31 வயது இளைஞரான சின்னசாமி. அதே பகுதியைச் சேர்ந்த சீலா என்ற 23 வயது இளம் பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சீலா அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார்.

சின்னசாமி தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோதும், சீலா அதனைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டு, வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளுமாறு சின்னசாமியிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வேலைக்கு செல்லும் வழியில் சீலாவின் பின்னால் சென்று தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் உச்சக்கட்ட ஆத்திரமடைந்த சின்னசாமி, சீலாவைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று, சீலா தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காகத் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கும் வந்த சின்னசாமி, சீலாவிடம் மீண்டும் திருமணப் பேச்சை எடுத்துள்ளார். இதனை கேட்டு கோவமடைந்த சீலா வழக்கம் போல மறுக்கவே, ஆத்திரத்தின் எல்லைக்குச் சென்ற சின்னசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துப் பொதுமக்களின் கண்முன்னே சீலாவின் கழுத்தை அறுத்துள்ளார். அதோடு நிறுத்தாமல், அவரது வயிறு மற்றும் முதுகுப் பகுதியிலும் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். மேலும் பேருந்து நிலையத்தில் அலறியுள்ளார். இதில் படுகாயமடைந்த சீலா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக பயணிகள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சீலாவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பேருந்து நிலையத்தில் இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து உடனடியாகச் செயல்பட்ட அவர்கள், தப்பியோட முயன்ற சின்னசாமியை வளைத்துப் பிடித்து, சரமாரியாகத் தர்ம அடி கொடுத்தனர். பின்னர், இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்து, சின்னசாமியைக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மறுபுறம், ரத்த வெள்ளத்தில் கிடந்த சீலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

இந்த கொடூரச் செயல் குறித்து தருமபுரி நகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சின்னசாமியைக் கைது செய்துள்ளனர். ஒருதலைக் காதலா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதமா என்ற கோணத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து தமிழகத்தில் கொலை , கொள்ளை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.