சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கபட்டுள்ள இலங்கை பிரஜை சிவராசா அனோஜன் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை, மனிதாபிமான, அடிப்படைகளில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கனிவுடன் பரிசீலிக்குமாறு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவுத்க்கு,
இலங்கை குடியரசிற்கான சவூதி அரேபிய தூதுவரை நேரடியாக சந்தித்து, அவர் ஊடாக, ஒரு கூட்டு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும் என, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை (PCTSP) அங்கத்தவ சகோதர கட்சி தலைவர்களிடம் கோரி உள்ளேன்.
இது தொடர்பில் நாம் பேரவைக்குள் அவசரமாக உரையாடுகின்றோம். மேலும், இவ்விடயத்தை நமது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஊடாகவும் முன்னெடுத்து, இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இவ்விடயத்தை சவூதி அரேபியா அரசிடம் எடுத்து செல்லுமாறும் கோருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.



