நெல்லையில் பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாதிரியாருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ல் நெல்லையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக மதபோதகர் ஆபிரகாம் கைதாகி இருந்தார்.
நீதிபதி இந்த தீர்ப்பை வாசித்து கொண்டிருந்த போது கூண்டில் நின்று கொண்டிருந்த, பாதிரியார் ஆபிரகாம் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அங்கிருந்த போலீசார் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.
நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் மதபோதகர் ஆபிரகாம். இவர் அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு பிரார்த்தனைக்காக வரும் சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 10-க்கு மேற்பட்ட சிறுமிகளிடம் தொடர்ச்சியாக பாலியல் சீண்டல், வன்கொடுமையில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கடந்த 2022- ஆம் ஆண்டு இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் ஆபிரகாமை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதி சுரேஷ் குமார் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார். அப்போது ஆபிரகாம் மீதான குற்றம் அனைத்தும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் தமிழக அரசு நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பை வாசித்து கொண்டிருந்த போதே, கூண்டில் நின்று கொண்டிருந்த பாதிரியார் ஆபிரகாம் மயங்கி விழுந்தார். உடனே அருகில் நின்ற போலீசார் அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் தெளித்து எழுப்பினர். பின்னர் தண்ணீர் கொடுத்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.



