சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களாக, “ஆகஸ்ட் 12, 2026 அன்று பூமி தனது புவியீர்ப்பு விசையை 7 வினாடிகளுக்கு இழக்கும்; அதனால் உலகம் முழுவதும் சுமார் 90 கோடி (அல்லது பல கோடி) மக்கள் உயிரிழப்பார்கள்” என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற தளங்களில் வெளியான வீடியோக்கள் மூலமாகப் பரப்பப்பட்ட இந்தத் தகவல், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வதந்தியை முற்றிலும் மறுத்துள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா , இது அறிவியல்பூர்வமாக சாத்தியமில்லாத ஒரு முற்றிலும் தவறான தகவல் என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு கிரகத்தின் புவியீர்ப்பு விசை என்பது அதன் நிறையை பொறுத்தது. பூமி திடீரென தனது நிறையை பெருமளவில் இழக்கும் பட்சத்தில் மட்டுமே புவியீர்ப்பு விசை குறையவோ அல்லது மறையவோ வாய்ப்புள்ளது, ஆனால் அது போன்ற இயற்பியல் மாற்றம் எதுவும் நடக்காது என அறிவியலாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்த போலி வதந்தியில், ‘பிராஜெக்ட் ஆங்கர்’ என்ற இரகசிய நாசா ஆவணம் இருப்பதாகவும், கருந்துளைகளில் இருந்து வரும் ஈர்ப்பு அலைகளின் குறுக்கீட்டால் இந்த நிகழ்வு நிகழும் என்றும் தவறான அறிவியல் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும், இந்த குறிப்பிட்ட தேதியில் ஆர்க்டிக் முதல் ஸ்பெயின் வரை சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில், அத்தகைய வானியல் நிகழ்வுகளை மையமாக வைத்து இதுபோன்ற ‘உலக முடிவு’ வதந்திகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக உண்மை கண்டறியும் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இணையத்தில் லைக்ஸ் மற்றும் பார்வைகளைப் பெற பரப்பப்படும் இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் நாசா மற்றும் சர்வதேச அறிவியல் மையங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. ஆகஸ்ட் 12 அன்று வழக்கம் போல பூமி தனது நிலையான சுழற்சியிலும் புவியீர்ப்பு விசையிலும் தான் இயங்கும் என்பது உறுதியடைந்துள்ளது.



