20,000 இலவச விமான டிக்கெட்களை வழங்கும் இண்டிகோ

 

இண்டிகோ விமான நிறுவனம், தனது 20 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில், 20,000 இலவச விமான டிக்கெட்களை வழங்குகிறது.

20,000 இலவச விமான டிக்கெட்
இண்டிகோ விமான நிறுவனம் தனது முதல் சேவையை இந்தியாவில் 4 ஆகஸ்ட் 2006 அன்று துவங்கியது.

 

தற்போது 430-க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டு, தினமும் சுமார் 2,200 விமானப் பயணங்களை இயக்குகிறது.

மேலும், இந்தியாவின் உள்நாட்டு விமான சந்தையில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்கைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் விமான சேவையை தொடங்கி 20 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் தனது வாடிக்கையாளர்களுக்கு பயண கட்டணத்தை திருப்பி வழங்குவதன் மூலம், 20,000 இலவச டிக்கெட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்தச் சலுகை, 04 ஆகஸ்ட் 2026 மற்றும் 06 ஆகஸ்ட் 2026 ஆகிய தேதிகளுக்கு இடையில் செய்யப்படும் முன்பதிவுகளுக்குச் செல்லுபடியாகும்.

முன்பதிவிற்கான தொகையில் அதிகபட்சமாக ரூ.10,000 வரை திருப்பி வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 3-5 நாட்களுக்குள், இந்தப் பணம் திரும்ப வழங்கப்படும்.

அந்த பயணச்சீட்டில் எந்த மாற்றமும் அனுமதிக்கப்படாது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளரால் பயணச்சீட்டு ரத்து செய்யப்படும் பட்சத்தில், மீதமுள்ள தொகை இருப்பின், அது திரும்ப வழங்கப்பட மாட்டாது.

ஆனால், 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள்(தடை) சட்டத்தின்படி, தமிழ்நாடு மாநிலத்தைத் தவிர, இந்தியா முழுவதும் இது செல்லுபடியாகும். தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் இதில் பங்கேற்கக் கூடாது.

இந்தச் சலுகையானது, இண்டிகோவின் இணையதளம், மொபைல் செயலி மற்றும் 6Eskai எனப்படும் AI மெய்நிகர் உதவியாளர் ஆகியவற்றில் செய்யப்படும் முன்பபதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ஒருவழிப் பயணம், இருவழிப் பயணம், நேரடிப் பயணம், இணைப்பு விமானங்கள் மற்றும் பல நகரப் பயணங்கள் உட்பட எகானமி மற்றும் ஸ்ட்ரெட்ச் வகுப்புகளில் உள்நாட்டு முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

பங்கேற்பாளர்கள், கணினி அமைப்பு மூலம் உருவாக்கப்படும் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு பங்கேற்பாளரும் இண்டிகோ தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்.

அந்த கேள்வி, முன்பதிவின் போது வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்கு, மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பப்படும்.

ஒரு கேள்விக்குச் சரியாகப் பதிலளிக்க 3 வாய்ப்புகள் வழங்கப்படும். கேள்விக்குச் சரியாகப் பதிலளிக்கும் பங்கேற்பாளர், பணத்தைத் திரும்பப் பெறத் தகுதி பெறுவார்.

கேள்வி அனுப்பப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அதற்குப் பதிலளிக்கத் தவறினால், அல்லது கேள்விக்குத் தவறாகப் பதிலளித்தால், அவர் தகுதி பெறமாட்டார்.