ஐக்கிய அரபு துபாயில் அடுத்தடுத்து வெடிப்பு சத்தங்கள்….! துபாயில் பெரும் பரபரப்பு…

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் உள்ள ஜெபெல் அலி (Jebel Ali) தொழிற்பகுதியில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், இரவு வானத்தை மூடும் அளவுக்கு கரும்புகை எழுவது போல் உள்ளது.

ஏழு வெடிப்புகள்
ஈரானின் Mehr செய்தி நிறுவனம், எமிரேட்ஸ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியிட்ட தகவலின்படி, சுமார் 20 நிமிடங்களுக்குள் குறைந்தது ஏழு வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ததாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெடிப்புகள் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டதா அல்லது தொழிற்சாலை விபத்தா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ஈராக் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் நீடித்து வரும் நிலையில், யேமனிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் எமிரேட்ஸ் அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும், NASA-வின் வெப்பப் படிம (Thermal Imagery) தகவல்களை மேற்கோள்காட்டிய Mehr செய்தியின்படி, ஜெபெல் அலி துறைமுகத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் சேமிப்பு மற்றும் பரிமாற்றக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது சேதம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளிகளில், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே கரும்புகை அடர்த்தியாக எழுவது காணப்படுகிறது.

எனினும், அந்தக் காணொளிகளின் நம்பகத்தன்மையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. அருகிலுள்ள அல் ஃபுர்ஜான் (Al Furjan) பகுதியில் வசிப்பவர்களும், வெடிப்புகள் பதிவான அதே நேரத்தில் பலத்த அதிர்வு மற்றும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

துபாய் நகர மையத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ள ஜெபெல் அலி, உலகின் மிகப்பெரிய செயற்கை துறைமுகங்களில் ஒன்றையும், முக்கிய சுதந்திர வர்த்தக மண்டலத்தையும் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய தொழில் மற்றும் வர்த்தக மையமாகும்.

அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக, பிராந்தியத்தில் அமெரிக்காவின் கூட்டாளி நாடாக உள்ள ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில மாதங்களாக உயர்மட்ட பாதுகாப்பு எச்சரிக்கையில் இருந்து வருகிறது.