ரஷ்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு -ரஷ்ய தாக்குதலில் வடகொரிய ஏவுகணை!

 

கிழக்கு மற்றும் வடகிழக்கு உக்ரேனில் உள்ள நான்கு குடியிருப்புப் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

உக்ரேனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிராஸ்நோயார்ஸ்கோயே என்ற குடியிருப்புப் பகுதியை ரஷ்யாவின் சென்டர் படைப்பிரிவு கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நோர்த் படைப்பிரிவினர் சுமி பிராந்தியத்தில் உள்ள மாலா ஸ்லோபோட்கா மற்றும் மொக்ரிட்சியாவ் ஆகிய பகுதிகளையும், கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள யுர்சென்கோவே பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு தடுப்பு மண்டலத்தை உருவாக்குவதாக ரஷ்யா தெரிவித்து வரும் நிலையில், வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்திக் கொண்டே கிழக்கு உக்ரேன் முழுவதிலும் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், ரஷ்ய முன்னேற்றங்களை வலுவாக எதிர்த்து நிற்பதாகவும், ரஷ்யப் படைகளுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் உக்ரேன் தரப்பு தெரிவித்து வருகிறது.

ரஷ்ய தாக்குதலில் வடகொரிய ஏவுகணை!

உக்ரைனின் ரடுஷ்னே கிராமத்தின் மீதான ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதலில் வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணையை நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், ஆரம்பகட்ட ஆய்வுகளில் அது வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை என்பதையே உறுதிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

நீண்ட நாட்களின் பின்னர் வட கொரிய ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருப்பது ரஷ்ய மற்றும் வட கொரிய ஆட்சிக்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாகக் கூறிய ஜெலென்ஸ்கி, ரஷ்யாவிற்கு ஏவுகணைகளையும் வீரர்களையும் வட கொரியா வழங்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், கூடுதல் வான் பாதுகாப்பு ஏவுகணைகள், குறிப்பாக பேட்ரியாட் அமைப்புகளுக்கான இடைமறிப்பு ஏவுகணைகள், அத்துடன் மேற்கத்திய நாடுகள் வழங்கும் பிற வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஆயுதங்களை பெறுவதில் உக்ரைன் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவும் வட கொரியாவும் தங்களது இராணுவ உறவுகளை விரிவுபடுத்தியுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணயியில், உக்ரைன் முழுவதுமாக வெளிநாட்டு ஆயுதங்களைக் கொண்டே போரிடுவதால், வெளிநாட்டு ஆயுதங்களின் பயன்பாட்டிற்காக ரஷ்யாவை விமர்சிக்க உக்ரைனுக்கு உரிமை இல்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.