ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றதாக அதிரடி தீர்ப்பு

 

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

அதன்படி, ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானதாகும் என உயர்நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2018 ஆம் ஆண்டு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஞானசார தேரருக்கு ​மேன்முறையீட்டு நீதிமன்றம் 6 வருட சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், அவ்வாறு அவருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என்பதால் அதனை செல்லுபடியற்றதாக கருதுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.