ஆன்லைனில்' பாஸ்போர்ட் பெறுவது எளிது!
11 Mar,2022
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன்: ஒரு காலத்தில் பாஸ்போர்ட் பெறுவது என்பது, ஒலிம்பிக் அல்லது தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று, பதக்கம் பெறுவது போல இருக்கும். 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பம் செய்யும் நடைமுறை வந்ததும், அது மிகவும் எளிமையாகி விட்டது. விண்ணப்பம் செய்த மூன்று நாட்களிலேயே பாஸ்போர்ட் கிடைத்து விடுகிறது. ஆன்லைனில் விண்ணப்பம் செய்து, பாஸ்போர்ட் மையத்துக்கு, 'அப்பாயின்மென்ட்' பெற்று வரும் போது, 30 முதல் 35 நிமிடங்களில் பாஸ்போர்ட் நடைமுறைகள் முடிந்து விடும்.இந்த நேரத்தை, 'டிஜிட்டல் இண்டியா புரோகிராம்' என்ற ஒரு செயலி வாயிலாக மேலும் குறைக்கலாம்.இந்த, 'டிஜி லாக்கரில்' சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விட்டால், உண்மையான சான்றிதழ்களை கையில் எடுத்து வர வேண்டாம்.உண்மையான சான்றிதழ்களை பாஸ்போர்ட் மையத்தில் கொடுக்கும் போது அதை, 'ஸ்கேன்' செய்து பதிவேற்றம் செய்யும் நேரம் கிட்டத்தட்ட, 10 முதல் 15 நிமிடம் எடுக்கும். 'டிஜி லாக்கர்' முறையில், இந்த நேரம் மிச்சப்படுத்தப்படும். உண்மையான சான்றிதழ்கள் தொலைந்து போய் விடுமே என்ற கவலையையும் தவிர்த்து விடலாம்.'சாட் வித் ஆர்.பி.ஓ.,' என்ற திட்டம் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, விண்ணப்பதாரர்கள் தங்கள் குறைகளை அனுப்பலாம். ஒவ்வொரு செவ்வாய் அன்றும், பகல் 12:00 முதல் 1:00 வரை, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக வரும் பிரச்னைகள் குறித்து, நானும், எங்கள் அதிகாரிகளும் கலந்து பேசி உடனே தீர்வு கொடுத்து விடுகிறோம்.ஒரு வாரத்துக்குள் அவர்களது பிரச்னைகள் முற்றிலும் தீர வழிவகை செய்து விடுகிறோம். இது தவிர, 73053 30666 என்ற எண்ணுக்கு போன் செய்து, என்னிடமே பொதுமக்கள் பேச முடியும்.இந்தியாவில் எங்கு வசித்தாலும், எங்கு வேண்டுமானாலும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்; புதுப்பிக்கலாம். வெளிமாநிலத்திலிருந்து இங்கு வந்து இருக்கும் போது, பாஸ்போர்ட் புதுப்பிக்கும் தேதி நெருங்கி விட்டால், அவர்கள் சென்னையிலேயே புதுப்பிக்கலாம். சென்னையில் அவர்களுக்கு சரியான முகவரி இல்லாத பட்சத்தில் மட்டுமே, 'போலீஸ் வெரிபிகேஷன்' பெறுவதற்காக, விண்ணப்பம், அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படும். சென்னையில் சரியான முகவரி இருந்து விட்டால், உடனே பாஸ்போர்ட் கிடைத்து விடும்.