இரண்டு பிள்ளைகளின் தந்தை முதலைத் தாக்குதலில் உயிரிழப்பு

 

கொழும்பு, பெல்லன்வில வாவியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தெரியவருகையில், கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் இருந்து மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

தாமரை மலர் பறிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாயில் இறங்கியபோதே ஹொரணை, கணன்வில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை முதலைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல்போயிருந்தார்.

பிரதேச மக்கள் அளித்த தகவலின் பேரில் அன்று தேடுதல் நடத்தப்பட்ட போதிலும் தகவல்கள் கிடைக்காத நிலையில், நேற்று பிற்பகல் அவர் காணாமல்போன இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்துப் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் முதலை தாக்கியதற்கான காயங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நுகேகொடை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனைகளை மேற்கொண்டதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.