இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியக் கடற்படையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஜெர்மன் நாட்டின் ‘U-1014’ என்ற டைப் VII C/41 வகை நீர்மூழ்கிக் கப்பல் 82 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டன் கடற்கரைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல்சார் தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் ஆழ்கடல் நிபுணர்கள் மேற்கொண்ட அதிநவீன நீர்மூழ்கி ஆய்வுகளின் போது, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான கடற்பகுதியில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சிதைவு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 1945-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில், பிரித்தானியக் கடற்படையின் லோச் போர்ட்’ மற்றும் ‘HMS லோச் சாடேல்’ உள்ளிட்ட நான்கு போர்க்கப்பல்கள் இணைந்து நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் இந்த ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது கப்பலில் இருந்த 48 மாலுமிகளும் உயிரிழந்ததாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கடலின் அடியில் சுமார் 200 அடி ஆழத்தில் மணல் மற்றும் கடற்பாசிகளுக்கு இடையே இக்கப்பல் சிதைந்துபோய் இருப்பது சோனார் (Sonar) கருவிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டறியப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள், அதன் தொர்பொருள் மதிப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் காரணமாகப் பாதுகாக்கப்பட்ட கடல்சார் பகுதியாக அறிவிக்கப்படவுள்ளது. கப்பலின் தற்போதைய நிலையைத் துல்லியமாகப் படம்பிடிக்கப் அடியில் இயங்கும் ட்ரோன்கள் மற்றும் தன்னாட்சி நீர்மூழ்கிக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அல்லது எஞ்சிய பாகங்கள் இருக்கலாம் என்பதால், இப்பகுதியில் தொந்தரவு ஏதும் செய்யாமல் ஆய்வுப் பணிகள் கவனமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீண்டகாலமாக விடைதெரியாமல் இருந்த போர்க்கால நினைவுகளுக்கு இந்தத் தேடல் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாம் உலகப் போரின் கடல்சார் உத்திகள், ரக நீர்மூழ்கிக் கப்பல்களின் உருவாக்கம் மற்றும் அக்காலக்கட்டத்தின் கடற்படை மோதல்கள் குறித்த புதிய தகவல்களை வெளிக்கொணர இந்த முக்கியக் கண்டுபிடிப்பு பெருமளவில் உதவும் என்று நம்பப்படுகிறது.



