பாரிஸ் ஈஃபிள் டவரை தாக்கிய ராட்சத மின்னல்

 

ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதன் தாக்கத்தால் பல நாடுகளில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிப் பதிவாகி வருகிறது. அதேபோல், பிரான்ஸ் நாட்டிலும் இதன் தாக்கம் கோரத்தாண்டவம் எடுத்துள்ளது. அதாவது, அந்த நாட்டின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.

குறிப்பாக பிசோஸ் (Pissos) பகுதியில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக பிரான்சின் தேசிய வானிலை ஆய்வு மையமான ‘மெட்டியோ-பிரான்ஸ்’ தெரிவித்து இருக்கிறது. இந்த கடுமையான வெப்பத்தின் கோரப்பிடியில் சிக்கி நாட்டில் பல உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன

வட ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனப் பகுதியில் இருந்து வீசும் வெப்பக் காற்று வளிமண்டலத்தின் உயர் அழுத்த அமைப்பால் ஐரோப்பாவின் மீது ஒரே இடத்தில் தேங்கி நிற்பது தான் இந்த அதீத வெப்ப அலைக்கு காரணம் என காலநிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, பிரான்ஸ் அரசு நாட்டில் உள்ள பல மாகானங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது. மேலும், 6 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இப்படியான சூழ்நிலையில், இந்த கடும் உஷ்ணத்தில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் முண்டியடித்து ஏசி, மின்விசிறிகள், ஏர் கூலர்களை வாங்கி வருகின்றனர்.

இதனால், அங்கு இந்த மாதிரியான எலக்ட்ரானிக் பொருட்களின் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சம்ப்ராய் லெஸ் டூர்ஸ் என்ற நகரில் இருக்கும் கடை ஒன்றில் ஏர் கூலர், ஏசி, மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படி ஒருபுறம் வெப்பம் வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், வெப்ப சலனத்தை குறைக்கும் விதமாக பிரான்ஸ் வானிலை மையம் இடியுடன் கூடிய கனமழைக்கு வரும் என்று 8 மாகாணங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, பெரிய ஆலங்கட்டி மழை, பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், பிரான்ஸின் தலைநகரான பாரிஸ் நகரும் ஒன்று. ஆரஞ்சு அலர்ட்டின் ஒரு பகுதியாக நேற்றிரவு பாரிஸ் நகரம் முழுவதும் கருமேகங்கள் சூழப்பட்டு இடி, மின்னல் காணப்பட்டது. அப்போது, புகழ்பெற்ற ஈஃபிள் டவரின் மீது ராட்சத மின்னல் தாக்கியது.

ஈஃபிள் கோபுரத்தின் உயரம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இடியுடன் கூடிய மழையின் அளவை பொறுத்து, 5 முதல் 10 முறை மின்னல் தாக்கப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த கோபுரம் எவ்வளவு சக்திவாய்ந்த இடி, மின்னலை தாங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இப்படியான சூழ்நிலையில் நேற்றிரவு விழுந்த ராட்சத மின்னலை பலர் போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோக்கள் பயங்கரமாக வைரலாகி வருகின்றன.