உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஐவரடங்கிய மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
அங்கு வருகை தந்த மருத்துவக் குழுவினர் முற்பகல் 9.00 மணிமுதல் மாலை வரை அவரைப் பரிசோதித்ததாக தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐவரடங்கிய மருத்துவக் குழு
கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய மருத்துவக் குழுவினரே இவ்வாறு பரிசோதனை செய்துள்ளனர்.
அத்துடன், எதிர்வரும் வாரம் சலேயின் குடும்ப உறவினர்களைச் சந்திப்பதற்கும் மருத்துவக் குழு தீர்மானித்துள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சிரேஷ்ட நிபுணத்துவ நீதவான் மனநல மருத்துவர் சுசித் மெண்டிஸின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நிபுணத்துவ மருத்துவர் சித்தாஹரி அபயநாயக்க, நிபுணத்துவ மருத்துவர் தசந்தி அக்மீமன, நிபுணத்துவ மருத்துவர் துலைக்கா அமரசிங்க வாஸ், நிபுணத்துவ மருத்துவர் வஜிர தர்மவர்தன ஆகியோர் செயற்படுகின்றனர்.



