நீர்க்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் –

ஹிருணிகா பிரேமசந்திரா

நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டன என்று பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் முன்னாள் சிறை கைதி என்ற வகையில், தான் சிறையில் இருந்த காலத்தில் அதிகாரிகள் கைதிகளை எவ்விதத்திலும் துன்புறுத்துவதைக் தான் கண்டதில்லை. குறிப்பாக, தமக்குத் தலைமை தாங்கிய பிரதான சிறைச்சாலை அதிகாரிகளை அங்குள்ள பெண் கைதிகள் மிகுந்த பாசத்துடன் “அம்மா” என்றே அழைப்பார்கள். அவ்வாறான நிலையில் சிறைச்சாலை சம்பவத்தின் உண்மையான பின்னணியை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கணடவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பங்களை தொடர்ந்து, இலங்கையின் பல சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக அமைதியின்மை மற்றும் பதற்றமான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. இலங்கையில் சிறைச்சாலைகளில் இவ்வாறான மோதல் சூழ்நிலைகள் பதிவாவது இது முதல் முறையல்லவென்றாலும், தற்போதைய அரசாட்சியின் கீழ் இந்த நிலைமை நாளுக்கு நாள் மேலும் தீவிரமடைந்து வருகிறது. அதற்கான மூலக் காரணங்கள் குறித்தும் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போதைய சிறைச்சாலை நெருக்கடிகளுக்கு முக்கிய காரணமாகத் தெரிவிக்கப்படுவது அங்கு அனுமதிக்கப்பட வேண்டிய கொள்ளளவை விட, தற்போது நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதுடன் நிலவும் கடுமையான இட நெருக்கடியாகும். கடந்த காலங்களில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் பெயரில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்காகப் பலரும் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்படுத்தப்பட்டனர். முறையான அரச பரிசோதனை அறிக்கைகளோ அல்லது சட்டப்பூர்வமான ‘பி’ அறிக்கைகளோ இன்றி, மாதக்கணக்கில் விசாரணைகளின்றி இளைஞர்கள் சிறைக்கூண்டுகளில் வாடுவதே சிறைச்சாலைகளில் ஆள் நெருக்கடி பெருகுவதற்கு மூலக் காரணமாக அமைகிறது.

மேலும், நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையில் பிரச்சினை குறித்து பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும், முன்னாள் சிறை கைதி என்ற வகையில், தான் சிறையில் இருந்த காலத்தில் அதிகாரிகள் கைதிகளை எவ்விதத்திலும் துன்புறுத்துவதைக் தான் கண்டதில்லை. குறிப்பாக, தமக்குத் தலைமை தாங்கிய பிரதான சிறைச்சாலை அதிகாரிகளை அங்குள்ள பெண் கைதிகள் மிகுந்த பாசத்துடன் “அம்மா” என்றே அழைப்பார்கள். சிறைச்சாலை அதிகாரிகளைப் பொறுத்தவரை கைதிகளுடன் இணக்கமான போக்கையே கடைப்பிடிக்க முற்படுகின்றனர். அதேபோல், பெரும் போதைப்பொருள் வியாபாரிகளின் குடும்பத்தினர் சிறை அதிகாரிகளுடன் இணக்கத்தோடு செல்லவே விரும்புவார்கள்.

சிறைச்சாலைகளில் தொடரும் இத்தகைய பதற்ற நிலைகள் தொடர்பில் பல்வேறு முறைசாராத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனவே, அரசாங்கம் இந்த விவகாரத்தில் எவ்விதப் பொறுப்புமற்று, இது ஏதோ எதிர்க்கட்சிகளின் சதி என்று கூறி ஒதுங்கிக் கொள்ள முடியாது என்றும். இதன் உண்மையான பின்னணியைக் கண்டறிந்து உரிய தீர்வுகளை வழங்குவது அரசாங்கத்தின் உடனடிக் கடமையாகும் என்றார்