அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில் ஹார்மூஸ் நீரிணையை திறப்பதற்கு ஈரான் 6 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த சூழலை அமெரிக்கா தரப்பு எப்படி கையாளப் போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. கடல் வழி வர்த்தகத்தில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும் ஹார்மூஸ் நீரிணையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இருதரப்பும் மும்முரம் காட்டி கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில் இந்த நீரிணையை தற்காலிகமாக மூடி ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை நடந்த போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஈரானை ஒட்டியுள்ள கடல் வழித்தடங்கள், துறைமுகங்களில் ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவின் கப்பற்படை பின் வாங்க வேண்டும் என்று கூறி 6 நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்
அமெரிக்கா தரப்பை பொறுத்தவரை ஹார்மூஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் ஏதும் இல்லை. அதேசமயம் அந்த வழியாக செல்லும் கப்பல்கள் மீது கிளர்ச்சி படைகள் தாக்குவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதுபற்றி ஈரானிய தலைவர்களிடம் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் வடக்கு மத்திய மரிப் சிட்டியின் மீது ஹவுதி படைகள் புதிய தாக்குதலை தொடங்கியிருப்பதாக ஏமன் அரசு உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி தங்களது அண்டை நாடுகளில் உள்ள இடம்பெயர்ந்த குழுவினரின் முகாம்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது. மறுபுறம் காஸா மற்றும் தென் லெபனான் மீது இஸ்ரேலிய படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவிடம் ஈரான் விதித்த நிபந்தனைகள் குறித்து விரிவாக பார்த்து விடலாம்.
ஹார்மூஸ் நீரிணையை திறக்க ஈரான் விதித்த 6 நிபந்தனைகள்
ஈரான் மற்றும் அதன் புனிதத்தன்மை மீதான அச்சுறுத்தலை நிறுத்தி கொள்ள வேண்டும்.
ஈரான், அதன் பிராந்திய நட்பு நாடுகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கப்பற்படை மற்றும் விமானப்படை தாக்குதல் மற்றும் முற்றுகையை திரும்ப பெற வேண்டும்.
ஈரானில் இதுவரை ஏற்பட்ட போரில் உண்டான இழப்புகளுக்கு உரிய நிதியை நிவாரணமாக வழங்க வேண்டும்.
அமெரிக்காவின் பொருளாதார தடைகளை திரும்ப பெற வேண்டும்.
ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க வேண்டும்.
அமெரிக்கா இழப்பீடு தர கோரிக்கை
இந்நிலையில் மத்திய கிழக்கு வியூக ஆய்வுகள் மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் அபாஸ் அஸ்லானி கூறுகையில், ஈரானின் நிலைப்பாடு என்பது அமெரிக்காவிடம் இருந்து இழப்பீடு தொகையை பெற வேண்டும். மேலும் இழுபறியாகும் விஷயங்களை தவிர்க்க வேண்டும் என விரும்புகிறது. அதாவது, இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, நாளை திடீரென வெளியேறி விடுவது, அதன்பிறகு தாக்குதல் தொடங்குவது, அச்சுறுத்துவது, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவது. இவ்வாறு மாற்றி மாற்றி செயல்படுவதை விரும்பவில்லை.
பேச்சுவார்த்தை சரியாக நடைபெற வலியுறுத்தல்
அமெரிக்கா ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்தித்து பார்க்க வேண்டும். வருங்காலத்தில் முரண்பட்டு நிற்கும் சூழலை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஈரான், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகின்றன. ஆனால் அதில் விதிக்கப்படும் நிபந்தனைகள் தான் இழுபறியாக கொண்டு செல்கின்றன. ஏதாவது ஒரு விஷயத்தில் முரண்பட்டு பேச்சுவார்த்தையில் இருந்து தடாலடியாக வெளியேற முடிவு செய்து விடுகின்றன.
இதுவரை நடைபெற்ற போரால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். இரு நாடுகளை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் வர்த்தக சூழலை இந்த போர் வெகுவாக பாதித்துள்ளது. எனவே நிலையான பிராந்திய சூழலை கொண்டு வர இரண்டு நாடுகளும் முன்வர வேண்டும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.



