மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக, ஆண் ஒருவரின் சடலம் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பதல்கும்புர, அழுபொத்த கொலனி முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் ஜனாஸாவிற்கு பதிலாக ஆண் ஒருவரின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும் சடலத்தை பிரேத அறையிலிருந்து ஒப்படைக்கும் போது அது துணியால் மூடப்பட்டிருந்ததாகவும், உறவினர்கள் அதனை அப்படியே பொறுப்பேற்று வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதச் சடங்குகளின்படி அடக்கம் செய்வதற்கு முன்னர் ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு தயாரான போதே, அது ஒரு ஆணின் சடலம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உறவினர்கள் அந்த சடலத்தை மீண்டும் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்று ஒப்படைத்ததுடன், உயிரிழந்த பெண்ணின் ஜனாஸாவை பெற்றுக்கொண்டு அன்றைய தினம் மாலையே இறுதி கிரியைகளை செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து மருத்துவமனையின் நிர்வாகப் பிரிவிடம் வினவியபோது, சடலத்தை அடையாளம் கண்டு எடுத்துச் செல்வது உறவினர்களினதும் பொறுப்பாகும் எனத் தெரிவித்துள்ளனர்.



