ரியாத் ஏர் அமெரிக்க சந்தையில் புதிய அத்தியாயம்

 

தற்போது சவுதி அரேபியாவில் தேசிய விமான நிறுவனங்களாக சவுதியா மற்றும் ரியாத் ஏர் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதில் சவுதியா பாரம்பரிய தேசிய விமான நிறுவனமாக தொடர்ந்தாலும், ரியாத் ஏர் உலகளாவிய விமான வலையமைப்பை உருவாக்கும் புதிய தலைமுறை விமான நிறுவனமாக உருவெடுத்து வருகிறது.

சவுதி அரேபியாவின் புதிய விமான நிறுவனமான ரியாத் ஏர், அமெரிக்காவுக்கு மற்றும் அங்கிருந்து விமான சேவைகளை இயக்குவதற்கான முக்கிய அனுமதியை அமெரிக்க போக்குவரத்துத் துறையிடமிருந்து பெற்றுள்ளது. இந்த அனுமதி, ரியாத் ஏர் நிறுவனத்தின் உலகளாவிய விரிவாக்கத் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

ரியாத் ஏர் சேவைக்கு ஒப்புதல்
கடந்த மாதம் வெளிநாட்டு விமான சேவை அனுமதிக்காக விண்ணப்பித்திருந்த ரியாத் ஏருக்கு, நேற்று (ஜூன் 16-ஆம் தேதி) அமெரிக்க அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினர். ரியாத் ஏர் அமெரிக்க சந்தையில் நுழைவது பொதுநலனுக்கு ஏற்றது என அமெரிக்க போக்குவரத்துத் துறை தனது அனுமதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அனுமதியின் மூலம், அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகளை தொடங்குவதற்கான வாய்ப்பை ரியாத் ஏர் பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள நகரங்கள் நிறுவனத்தின் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தலைமை செயல் அதிகாரி டோனி டக்ளஸ் முன்பே தெரிவித்திருந்தார்.

போயிங் 787-9 ட்ரீம்லைனர்
இந்த அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பாகவே, ரியாத் ஏர் தனது சொந்த போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானங்களை பயன்படுத்தி லண்டனுக்கு முதல் திட்டமிட்ட சர்வதேச சேவையை தொடங்கியது. இதற்கு முன்பு, நிறுவனத்தின் சொந்த விமானங்கள் கிடைக்கும் வரை குத்தகை விமானங்கள் மூலமாக சேவைகள் வழங்கப்பட்டு வந்தன.

அதே நேரத்தில், ரியாத் ஏரின் விமானப் படையும் வேகமாக விரிவடைந்து வருகிறது. ஜூன் 4 முதல் ஜூன் 14 வரை நான்கு புதிய போயிங் 787-9 விமானங்கள் நிறுவனத்தில் இணைந்துள்ளன. இதன் மூலம், ஜூலை இறுதிக்குள் எட்டு விமானங்களை இயக்கும் இலக்கை நோக்கி நிறுவனம் வேகமாக முன்னேறி வருகிறது.

புதிய வளர்ச்சி வாய்ப்பு
சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியத்தின் ஆதரவுடன் 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரியாத் ஏர், நாட்டின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தை தாண்டி புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் சவுதியின் நீண்டகால திட்டத்தில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏற்கனவே கெய்ரோ, துபாய், ஜெத்தா, மாட்ரிட், மான்செஸ்டர் மற்றும் லண்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் விரைவில் விமான சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியாத் ஏரின் இலக்கு
2027 மார்ச் மாதத்திற்குள் 22 நகரங்களுக்கு சேவை வழங்குவதும், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களை இணைப்பதும் ரியாத் ஏரின் இலக்காக உள்ளது என்று டோனி டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

இந்த இலக்கை அடைவதற்காக 72 போயிங் 787 விமானங்கள், 60 ஏர்பஸ் A321neo விமானங்கள் மற்றும் 50 ஏர்பஸ் A350 விமானங்கள் வரை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

மேலும், அமெரிக்காவின் டெல்டா ஏர் லைன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்களுடன் கூட்டாண்மை ஒப்பந்தங்களையும் ரியாத் ஏர் உருவாக்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அட்லாண்டா – ரியாத் இடையே நேரடி விமான சேவையை வரும் அக்டோபர் மாதம் தொடங்க டெல்டா ஏர் லைன்ஸ் திட்டமிட்டுள்ளது.